டாஸ்மாக் கடை எதிரே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் குத்திக்கொலை மர்மநபருக்கு வலைவீச்சு


டாஸ்மாக் கடை எதிரே   குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் குத்திக்கொலை   மர்மநபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Dec 2019 10:17 PM GMT (Updated: 13 Dec 2019 10:17 PM GMT)

திரு.வி.க.நகரில் உள்ள டாஸ்மாக் கடையின் எதிரே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டரை கத்தியால் சரமாரியாக குத்தியதில் அவர் உயிரிழந்தார். கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை கொளத்தூர் சத்யசாய் நகரை சேர்ந்தவர் முருகன் என்ற சுரேஷ்குமார் (வயது 43). பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளாக குடிபோதைக்கு அடிமையாக இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு திரு.வி.க.நகர் பஸ் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் பாரில் வழக்கம்போல் மதுகுடிக்க சென்றுள்ளார். குடித்துவிட்டு வெளியே வந்த போது, இவருக்கும் அங்கு வந்த ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த தகராறு முற்றியநிலையில், அந்த நபர் முருகனை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

மர்மநபருக்கு வலை

இதனால் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த முருகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முருகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த திரு.வி.க. நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து கொலைக்கு காரணமான மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story