வைத்தர்ணா ஏரியில் அமைகிறது: மாநகராட்சிக்கு சொந்தமாக நீர் மின் உற்பத்தி நிலையம் - உத்தவ் தாக்கரே அனுமதி வழங்கினார்


வைத்தர்ணா ஏரியில் அமைகிறது: மாநகராட்சிக்கு சொந்தமாக நீர் மின் உற்பத்தி நிலையம் - உத்தவ் தாக்கரே அனுமதி வழங்கினார்
x
தினத்தந்தி 13 Dec 2019 11:00 PM GMT (Updated: 13 Dec 2019 10:39 PM GMT)

வைத்தர்ணா ஏரியில் நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்க மும்பை மாநகராட்சிக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அனுமதி வழங்கினார்.

மும்பை,

மத்திய வைத்தர்ணா ஏரி கட்டுமான பணிகள் முடிந்த பிறகு அதில் நீர்மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என கடந்த 2012-ம் ஆண்டு மும்பை மாநகராட்சி தேர்தலுக்கு முன்பு சிவசேனா வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால், மத்திய வைத்தர்ணா ஏரி கட்டிமுடிக்கப்பட்ட பிறகும் அங்கு நீர்மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படாமல் இருந்தது.

இந்தநிலையில் சொந்தமாக நீர்மின் உற்பத்தி நிலையம் அமைக்க மும்பை மாநகராட்சி மாநில அரசிடம் அனுமதி கேட்டு இருந்தது.

இதில், மத்திய வைத்தர்ணா ஏரியில் நீர்மின் உற்பத்தி மையம் அமைத்து கொள்ள மும்பை மாநகராட்சிக்கு, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அனுமதி வழங்கி உள்ளார்.

மும்பை மாநகராட்சிக்கு சொந்தமாக இதுவரை மின் உற்பத்தி நிலையங்கள் என எதுவும் கிடையாது. மாநகராட்சியின் கீழ் உள்ள பெஸ்ட் நிறுவனம் தனியாரிடம் வாங்கியே வாடிக்கையாளர்களுக்கு மின்வினியோகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story