தானிப்பாடி அருகே, சாராயம் கடத்திய 2 பேர் கைது - கார் பறிமுதல்


தானிப்பாடி அருகே, சாராயம் கடத்திய 2 பேர் கைது - கார் பறிமுதல்
x
தினத்தந்தி 14 Dec 2019 10:30 PM GMT (Updated: 14 Dec 2019 1:50 PM GMT)

தானிப்பாடி பகுதியில் சாராயம் கடத்திய காரை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

திருவண்ணாமலை,

தானிப்பாடி பகுதி வழியாக கார்களில் சாராயம் கடத்தப்படுவதாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்திக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, திருவண்ணாமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் தானிப்பாடி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கல்நாட்டு புதூர் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 3 கார் டியூப்களில் சாராயம் கடத்தப்பட்டது கண்டறியப்பட்டு காரை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக காரில் வந்த தண்டராம்பட்டு தாலுகா கல்நாட்டுபுதூர் கிராமத்தை சேர்ந்த முத்து (வயது 36), கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா குரும்பலூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் (47) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து போலீசார் தண்டராம்பட்டு தாலுகா பெருங்களத்தூர் கிராமத்தில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இளையாங்கன்னி கிராமத்தை சேர்ந்த கிறிஸ்துராஜ் (வயது 26) என்பவர் மதுபான பாட்டிகளை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரையும் போலீசார் கைது செய்து 212 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Next Story