வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த வேட்டி- சேலைகளை தெருவில் வீசிய கிராம மக்கள்


வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக  வீட்டில் பதுக்கி வைத்திருந்த வேட்டி- சேலைகளை தெருவில் வீசிய கிராம மக்கள்
x
தினத்தந்தி 14 Dec 2019 10:45 PM GMT (Updated: 14 Dec 2019 5:33 PM GMT)

திட்டக்குடி அருகே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த வேட்டி-சேலைகளை கிராம மக்கள் தெருவில் வீசி யதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பொருட்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநத்தம், 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா மங்களூர் ஒன்றியம் 17-வது வார்டில் கொரக்கை, அதர்நத்தம், ஆலம்பாடி ஆகிய கிராமங்கள் உள்ளடங்கியுள்ளன. இந்த கிராமங்களில் மொத்தம் 4,500 வாக்காளர்கள் உள்ளனர். இதில் கொரக்கை கிராமத்தில் மட்டும் 2,500 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்தார். இந்த விருப்பத்தை கிராம மக்களிடம் தெரிவித்தார். இது தொடர்பாக கூட்டம் நடத்தி, கிராம மக்கள் அனைவரும் அவருக்கு ஓட்டுப்போடுவதாக உறுதி அளித்தனர். கொரக்கை கிராமத்தை சேர்ந்தவர்களின் ஓட்டுகளை பெற்றாலே போதும், வெற்றிபெற்று விடலாம் என்று அவர் நினைத்திருந்தார்.

இந்த நிலையில் அதே பதவிக்கு அ.தி.மு.க. பிரமுகரான ஆலம்பாடியை சேர்ந்த ஒருவர் போட்டியிடுகிறார். சுயேச்சை வேட்பாளரின் நம்பிக்கையை உடைத்தெறி யும் வகையிலும், வாக்காளர்களை தன்பக்கம் இழுப்பதற்காகவும் அவர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வேட்டி-சேலை, 2020-ம் ஆண்டுக்கான காலண்டர் உள்ளிட்ட பொருட்களை மூட்டைகளில் கட்டி கொரக்கை கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருடைய வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனுடன் வாக்காளர் பட்டியலும், அந்த பொருட்களை யார்-யாருக்கு வழங்க வேண்டும் என்ற பட்டியலும் இருந்தது.

இது பற்றி அறிந்ததும் சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களிப்பதாக கூறியிருந்த கிராம மக்கள் நேற்று காலை ஒன்று திரண்டு, பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு முன்பு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கிராம மக்கள், வீட்டிற்குள் நுழைந்து, அங்கு பதுக்கி வைத்திருந்த வேட்டி-சேலை, காலண்டர், வாக்காளர் பட்டியல் உள்ளிட்டவைகளை தூக்கி, தெருவில் வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் ராமநத்தம் போலீசார் விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள், உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வேட்டி-சேலை, காலண்டர் உள்ளிட்ட பொருட்களை வைத்துள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து வேட்டி-சேலை, காலண்டர் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story