மூளைச்சாவு அடைந்த விவசாயியின் உடல் உறுப்புகள் தானம் - 8 பேர் மறுவாழ்வு பெறுகிறார்கள்


மூளைச்சாவு அடைந்த விவசாயியின் உடல் உறுப்புகள் தானம் - 8 பேர் மறுவாழ்வு பெறுகிறார்கள்
x
தினத்தந்தி 14 Dec 2019 10:30 PM GMT (Updated: 14 Dec 2019 6:49 PM GMT)

மூளைச்சாவு அடைந்த விவசாயியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதன்மூலம் 8 பேர் மறுவாழ்வு பெறுகிறார்கள்.

பெங்களூரு,

ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா ஒசஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் புட்டசாமி. இவருடைய மனைவி சசிகலா. இந்த தம்பதியின் மகன் விகாஷ் (வயது 30). விவசாயி. இவர் கடந்த ஒரு மாதமாக தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் ஹாசனில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். அப்போது மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் ரத்த உறைவை சரிசெய்ய முடியவில்லை. இதனால் அவர் ‘கோமா‘ நிலைக்கு சென்றார். அதன்பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு வரப்பட்டார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விகாசுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி விகாஷ் மூளைச்சாவு அடைந்தார். இதுகுறித்து டாக்டர்கள் விகாசின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

இதைக்கேட்டு கண்கலங்கிய அவர்கள் சோகத்திலும் தங்களது மகன் விகாசின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.

இதுபற்றி டாக்டர்களிடம் கூறினார்கள். டாக்டர்களும் ஒப்புக்கொண்டனர்.

அதன்பிறகு விகாசின் உடலில் இருந்து இதயம், சிறுநீரகம், கண்கள் உள்பட பல உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் தானமாக பெறப்பட்டன. இந்த உறுப்புகள் பிற மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டன. விகாசின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலம் 8 பேர் மறுவாழ்வு பெற உள்ளது குறிப் பிடத்தக்கது.

Next Story