அரசு துறை காலி பணியிடங்களில் அங்கன்வாடி ஊழியர்களை நியமிக்க வேண்டும் சங்க மாநாட்டில் தீர்மானம்


அரசு துறை காலி பணியிடங்களில் அங்கன்வாடி ஊழியர்களை நியமிக்க வேண்டும் சங்க மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 14 Dec 2019 10:30 PM GMT (Updated: 14 Dec 2019 7:52 PM GMT)

அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களில் அங்கன்வாடி ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகர்கோவில்,

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க குமரி மாவட்டக்கிளை சார்பில் 4-வது மாவட்ட மாநாடு நாகர்கோவிலில் நேற்று நடந்தது. இதற்கு சங்க தலைவர் விஜயலெட்சுமி தலைமை தாங்கினார். ஜெயந்தி கொடியேற்றி வைத்தார். அம்புஜா வித்தியா வரவேற்று பேசினார். சி.ஐ.டி.யு. தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் இந்திரா தொடக்க உரையாற்றினார்.

மாவட்ட செயலாளர் சரஸ்வதி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ராஜ்குமார், சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் சந்திரகலா, மாவட்ட தலைவர் சிங்காரன் உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள். சங்க மாநில துணைத்தலைவர் சித்திரை செல்வி சிறப்புரையாற்றினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகனன் நிறைவுரையாற்றினார். முடிவில் பார்வதி நன்றி கூறினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நியமிக்க வேண்டும்

அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களில் தகுதி வாய்ந்த அங்கன்வாடி ஊழியர்களை, அவரவர்களது கல்வித்தகுதி அடிப்படையில் நியமிக்க வேண்டும். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக பணியாளருக்கு ரூ.21 ஆயிரமும், உதவியாளருக்கு ரூ.18 ஆயிரமும் வழங்க வேண்டும்.

ஓய்வுபெறும்போது ஓய்வூதியமாக கடைசிமாத ஊதியத்தில் பாதியை வழங்க வேண்டும். பணிக்கொடையாக ஊழியருக்கு ரூ.10 லட்சமும், உதவியாளருக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும். மத்திய அரசு உயர்த்தி வழங்கிய ஊதியங்களை மாநில அரசு வழங்க வேண்டும். அரசு வழங்கும் பொருட்களை அனைத்து மையங்களுக்கும் சரியாக கொடுக்க வேண்டும். வாடகை மையம், மினி மையம் என்று பாரபட்சம் காட்டாமல் எல்லா மையங்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story