பல்லடம் அருகே மர்ம காய்ச்சல்: சிறப்பு மருத்துவ முகாமில் 256 பேருக்கு சிகிச்சை - 57 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிப்பு


பல்லடம் அருகே மர்ம காய்ச்சல்: சிறப்பு மருத்துவ முகாமில் 256 பேருக்கு சிகிச்சை - 57 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிப்பு
x
தினத்தந்தி 14 Dec 2019 10:49 PM GMT (Updated: 14 Dec 2019 10:49 PM GMT)

பல்லடம் அருகே மர்ம காய்ச்சல் பாதித்த பெத்தாம்பூச்சிபாளையம் கிராமத்தில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் 256 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 57 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மங்கலம்,

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே இச்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது பெத்தாம்பூச்சிபாளையம் கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் விசைத்தறி தொழில் பிரதான தொழிலாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் 300 பேர் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றனர். பின்னர் காய்ச்சல் குணமான ஒரு சில நாட்களில் அவர்களது உடலில் தீப்புண் போன்ற கொப்பளங்கள், கை, கால்களில் வீக்கம், நடக்க முடியாத அளவுக்கு மூட்டு வலி, தொண்டை கரகரப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்தனர். இது குறித்து முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தாங்கள் காய்ச்சலால் அவதிப்படுவதை பொதுமக்கள் சிலர் வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சுகாதார ஆய்வாளர் லோகநாதன், கிராம நிர்வாக அதிகாரி சாமிநாதன் ஆகியோர் நேற்று முன்தினம் பெத்தாம்பூச்சிபாளையத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று காலை பெத்தாம்பூச்சிபாளையம் பகுதியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தீபலட்சுமி தலைமையில் தீவிர காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

முகாமில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் காய்ச்சல் குணமடைந்தவுடன் சருமப்பிரச்சனை, உடலில் தீப்புண் போன்ற கொப்பளங்கள், கை கால் வீக்கம், நடக்க முடியாத அளவுக்கு மூட்டுவலியால் அவதிப்படுபவர்கள் என 256 பேர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். முகாமில் கலந்து கொண்ட 2 பேருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் அவர்கள் மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முகாமில் கலந்து கொண்ட 57 பேரிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது. அது ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த அறிக்கை வந்த பின்னர் தான் அது எந்தவகையான காய்ச்சல் என கூற முடியும் என்று டாக்டர் தெரிவித்தார்.

முகாமில் மருத்துவ அலுவலர்கள் டாக்டர்கள் அகிலன், ரஞ்சனி, நிவேதிதா மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். இந்த மருத்துவ முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.


Next Story