காரைக்குடியில் கண்மாய் அருகே குப்பை கொட்டுவதை எதிர்த்து போராட்டம்


காரைக்குடியில் கண்மாய் அருகே குப்பை கொட்டுவதை எதிர்த்து போராட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2019 11:25 PM GMT (Updated: 14 Dec 2019 11:25 PM GMT)

காரைக்குடியில் உள்ள அதலைக்கண்மாய் தரைப்பாலம் அருகே குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

காரைக்குடி,

காரைக்குடி வ.உ.சி. ரோடு அதலைக்கண்மாய் தரைப்பாலம் அருகே சோர்வார் ஊரணி குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு மற்றும் சுற்றியுள்ள பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் அந்த பகுதியில் உள்ள அதலைக்கண்மாய் மறுகால் செல்லும் தரைப்பாலம் அருகே கொட்டி வைத்து குப்பை கிடங்காக மாற்றியுள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருவதாகவும், அங்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதாக கூறி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்குடி நகராட்சி அதிகாரிகள் லாரியை கொண்டு வந்து துப்புரவு பணியாளர்கள் மூலம் குப்பைகளை அள்ளும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது:-

இந்த பகுதியிலிருந்து வேட்டைகாளியம்மன் கோவிலுக்கு செல்ல இந்த வழியை தான் பயன்படுத்த வேண்டிய நிலைஉள்ளது. இந்த பகுதியில் மட்டுமல்லாமல் காரைக்குடியை சுற்றிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் இங்கு வந்து கொட்டி வைத்து செல்வதால் இந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

இதுதவிர இந்த குப்பையில் இருந்து வெளியேறும் புழுக்கள், கொசுக்களால் பல்வேறு நோய்கள் பரவி வருகிறது. காரைக்குடி நகராட்சி சார்பில் குப்பைகளை கொட்டுவதற்காக ரஸ்தா பகுதியில் ஏற்கனவே குப்பை கிடங்கு அமைக்கப்பட்டு அங்கு காரைக்குடி மற்றும் தேவகோட்டை பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. ஆனால் இங்கு குப்பைகளை கொட்டி வருகின்றனர். இது குறித்து பணியாளர்களிடம் கேட்டால் தற்போது இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெறுவதால் இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை லாரியில் வெளியே எடுத்து செல்ல சிரமமாக இருப்பதாக கூறுகின்றனர். இங்கு குப்பைகள் கொட்டப்படுவதால் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இனி இந்த பகுதியில் குப்பை கொட்டப்பட்டால் காரைக்குடி நகராட்சி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம். இது தவிர இரவு நேரத்தில் சிலர் தரைப்பாலத்தில் இருந்து மது அருந்தி விட்டு காலி பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு செல்வதோடு, அருகிலுள்ள மின்விளக்குகளை உடைத்து சேதப்படுத்தி செல்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்ல பெண்கள் மிகவும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இரவு நேரங்களில் இந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story