திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 9,764 பேர் வேட்புமனு தாக்கல்


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 9,764 பேர் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 14 Dec 2019 11:58 PM GMT (Updated: 14 Dec 2019 11:58 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 9,764 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திருவள்ளூர்,

உள்ளாட்சி தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதி என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 24 மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கும், 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 230 ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கும், 526 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், 3,945 வார்டு உறுப்பினர் பதவிக்கும் என மொத்தம் 4 ஆயிரத்து 725 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. 9-ந் தேதி அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் 177 பேரும், 10-ந் தேதி 139 பேரும், 11-ந் தேதி 1,134 பேரும், 12-ந் தேதி 1,131 பேரும், 13-ந் தேதி 4,743 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்பாளர்களை மட்டுமே

இந்த நிலையில் வேட்புமனு தாக்கலின் 6-வது நாளான நேற்று திருவள்ளூர் மற்றும் கடம்பத்தூர் பகுதிகளில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மாவட்ட குழு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் கூட்டம் கூட்டமாக டிராக்டர்களில் ஆட்களை ஏற்றிக்கொண்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வேட்பாளர்களை மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்தனர். இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் கூட்ட நெரிசலால் பரபரப்பு ஏற்பட்டது. 6-வது நாளான நேற்று மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கு 19 பேரும், ஒன்றியகுழு உறுப்பினர் பதவிக்கு 209 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 314 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 1,898 பேரும் என மொத்தம் 2 ஆயிரத்து 440 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

9,764 பேர்

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் இதுவரை மொத்தம் 9,764 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இதுவரை அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. என இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

அ.ம.மு.க.வினர் மட்டுமே நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நாளை (திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story