தேங்கி நிற்கும் மழைநீர்-இருக்கைகள் சேதம்: பொலிவிழந்து காணப்படும் நாகை புதிய கடற்கரை


தேங்கி நிற்கும் மழைநீர்-இருக்கைகள் சேதம்: பொலிவிழந்து காணப்படும் நாகை புதிய கடற்கரை
x
தினத்தந்தி 15 Dec 2019 10:30 PM GMT (Updated: 15 Dec 2019 7:36 PM GMT)

தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் இருக்கைகள் சேதமடைந்துள்ளதால் நாகை புதிய கடற்கரை பொலிவிழந்து காணப்படுகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோவில் ஆகிய ஆன்மிக சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனால் நாகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நாகை நகரில் பொழுதுபோக்கு அம்சமாக கலங்கரை விளக்கம் மற்றும் புதிய கடற்கரை மட்டுமே உள்ளது. இதில் கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் நாகை கடற்கரை சிதிலமடைந்தது. இதை தொடர்ந்து நாகை புதிய கடற்கரை மீண்டும் புதுபொலிவுடன் சீரமைக்கப்பட்டது. பாராசூட் பயிற்சி, படகு சவாரி, சிறுவர் விளையாட்டு பூங்கா, நடை பயிற்சி மேடை, கடற்கரை வாலிபால், கால்பந்து உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன. இதனால் அங்கு காலை, மாலை நேரங்களில் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து கடற்கரையில் காற்று வாங்கி செல்கின்றனர். இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

பொலிவிழந்து

தற்போது கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டு பொதுமக்கள் அமர முடியாத நிலையில் உள்ளது. இங்குள்ள விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக புதிய கடற்கரையில் உள்ள சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ள இடத்தில் குளம் போல மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் நாகை புதிய கடற்கரை பொலிவிழந்து காணப்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாகை புதிய கடற்கரையில் சேதமடைந்த இருக்கைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை சீரமைத்து, தேங்கி உள்ள மழைநீரை வெளியேற்றி வடிகால் வசதி செய்து தரவேண்டும் என்று நாகை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story