வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்: நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது


வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்: நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 16 Dec 2019 10:30 PM GMT (Updated: 16 Dec 2019 7:46 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது.

நாகப்பட்டினம், 

நாகை மாவட்டத்தில் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் கடந்த 9-ந்தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் நாகை மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய கூட்டம் அலைமோதியது.

இதேபோல நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக அலுவலகத்தை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வேட்பு மனு மீது பரிசீலனை இன்று( செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. மனுக்களை திரும்ப பெற 19-ந்தேதி(வியாழக்கிழமை) கடைசி நாளாகும். அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

நாகை மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் 3,426 வார்டுகளில் சட்டசபை தொகுதி அடிப்படையில் ஆண் வாக்காளர்கள் 4 லட்சத்து 83 ஆயிரத்து 351 பேரும், பெண் வாக்காளர்கள்4 லட்சத்து 88 ஆயிரத்து 974 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 13 பேரும் என மொத்தம் 9 லட்சத்து 72 ஆயிரத்து 338 வாக்காளர்கள் உள்ளனர்.

Next Story