விடுதியில் சுற்றுலா பயணியின் பணம் திருடியவர் அடையாளம் தெரிந்தது; கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் விசாரணை


விடுதியில் சுற்றுலா பயணியின் பணம் திருடியவர் அடையாளம் தெரிந்தது;  கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் விசாரணை
x
தினத்தந்தி 16 Dec 2019 10:18 PM GMT (Updated: 16 Dec 2019 10:18 PM GMT)

கன்னியாகுமரி விடுதியில் சுற்றுலா பயணியின் பணம் திருடியவர் அடையாளம் தெரிந்தது. கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி, 

அரியானா மாநிலத்தை சேர்ந்த அகன்ஷா தீட்ஜித் என்பவர் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தார். அவர் அங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினார். மாலை அறை கதவை பூட்டிவிட்டு கடற்கரைக்கு சென்றார். அப்போது யாரோ மர்ம நபர் அறை கதவை திறந்து, உள்ளே புகுந்து அங்கு வைத்திருந்த ரூ.17 ஆயிரம் மற்றும் பான்கார்டு, ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்சு ஆகியவற்றை திருடி சென்று விட்டார்.

இதுபற்றி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அவர் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை பார்த்த போது, அகன்ஷா தீட்ஜித் அறையில் இருந்து 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் வெளியே செல்வது பதிவாகியிருந்தது. அவர் மாற்று திறனாளி போல் காணப்பட்டார். திருட்டில் ஈடுபட்டவர் அடையாளம் தெரிந்ததை தொடர்ந்து, அவரை பிடிக்க கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story