வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.45 லட்சம் மோசடி செய்த போலி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட 4 பேருக்கு சிறை


வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.45 லட்சம் மோசடி செய்த போலி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட 4 பேருக்கு சிறை
x
தினத்தந்தி 19 Dec 2019 10:15 PM GMT (Updated: 19 Dec 2019 8:25 PM GMT)

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.45 லட்சம் மோசடி செய்த போலி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட 4 பேருக்கு சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

திருச்சி,

திருச்சி தீரன்நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 60) அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அண்ணா தொழிற்சங்க தலைவராகவும் இருந்தார். இவர் பணியில் இருந்த போது அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர், மெக்கானிக் உள்ளிட்ட வேலைகளை வாங்கி தருவதாக 15 பேரிடம் ரூ.45 லட்சம் வசூல் செய்தார்.

ஆனால் பணம் கொடுத்தவர்களுக்கு அவர் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் பாஸ்கரனுக்கு நெருக்கடி கொடுத்தனர். இந்நிலையில் பாஸ்கரன், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் சென்னை போரூரை சேர்ந்த உமா (33), திருச்சி தீரன்நகரை சேர்ந்த நந்தகுமார், பால அமுதன், விவேக்ராய் ஆகியோர் வேலை வாங்கி தருவதாக கூறி, தன்னிடம் ரூ.45 லட்சத்தை மோசடி செய்து விட்டதாக புகார் செய்தார்.

தலா 3 வருடம் சிறை

இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் உமா, தான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி மோசடி செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உமா உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-5 கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டப்பட்ட உமா, நந்தகுமார், பாலஅமுதன், விவேக்ராய் ஆகிய 4 பேருக்கும் தலா 3 வருடம் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார்.

Next Story