நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை பிரிக்கும் பணி


நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை பிரிக்கும் பணி
x
தினத்தந்தி 19 Dec 2019 10:45 PM GMT (Updated: 19 Dec 2019 10:11 PM GMT)

நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் 3,106 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் இருகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 116 ஆண் வாக்காளர்கள், 4 லட்சத்து 38 ஆயிரத்து 749 பெண் வாக்காளர்கள், 31 திருநங்கைகள் என மொத்தம் 8 லட்சத்து 60 ஆயிரத்து 896 வாக்காளர்கள் உள்ளனர்.இவர்கள் வாக்களிக்க வசதியாக மாவட்டம் முழுவதும் 1,729 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருப்பதால் வாக்குப்பதிவு தேவையான பெட்டிகள் புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

35 வகையான பொருட்கள்

இதேபோல் வாக்குப்பதிவுக்கு தேவையான மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, ரப்பர் ஸ்டாம்பு, அரக்கு, பசை, பேனா, மை பாட்டில், நாடா உள்ளிட்ட 35 வகையான பொருட்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை பிரித்து அனுப்பும் பணி தொடங்கி உள்ளது.

நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி மேற்பார்வையில் இப்பணி நடைபெற்று வருகிறது. இந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட 105 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் பிரித்து ஒரு பையில் போடப்பட்டு வருவதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இவை வாக்குப்பதிவுக்கு முந்தையநாள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story