மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு


மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 22 Dec 2019 11:00 PM GMT (Updated: 22 Dec 2019 7:16 PM GMT)

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசனத்தின் தேவைக்கேற்ப அதிகரித்தோ, குறைத்தோ திறந்து விடப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் இந்த ஆண்டு தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைந்ததால் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு இந்த ஆண்டு குறைந்த அளவிலேயே தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

12 ஆயிரம் கனஅடி நீர்

குறிப்பாக கடந்த சில மாதங்களாகவே வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடிக்கும் குறைவாகவே தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் டெல்டா பாசன பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்து விட்ட நிலையில் ெநல் பயிர்கள் அறுவடைக்கு தயாராகி வருவதால் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடியில் இருந்து நேற்று மாலை 6 மணி முதல் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 100 கனஅடி வீதம் தண்ணீர் வரத்து உள்ளது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக இருந்த நிலையில், தற்போது அணைக்கு வரும் நீர்வரத்தை விட, அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் குறைய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story