ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கன்னியாகுமரிக்கு 25-ந் தேதி வருகை


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கன்னியாகுமரிக்கு 25-ந் தேதி வருகை
x
தினத்தந்தி 22 Dec 2019 11:00 PM GMT (Updated: 22 Dec 2019 7:54 PM GMT)

விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 25-ந் தேதி கன்னியாகுமரிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிறார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா வளாகத்தில் விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா நிகழ்ச்சி 25-ந் தேதி (புதன்கிழமை) மாலையில் நடக்கிறது. இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

இதற்காக விமானம் மூலம் டெல்லியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். பின்னர், விவேகானந்தர் மண்டப பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். முன்னதாக படகு மூலம் விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்று பார்வையிட உள்ளார்.

கலெக்டர்-ஐ.ஜி.ஆய்வு

ஜனாதிபதி வருகையையொட்டி கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், நெல்லை டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், நாகர்கோவில் கூடுதல் சூப்பிரண்டு விஜயபாஸ்கர், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆலோசனை கூட்டம்

அதைத்தொடர்ந்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கலெக்டர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகன்யா, விவேகானந்த கேந்திர செயலாளர் அனுமந்தராவ், மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அப்துல் மன்னான், கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் (பொறுப்பு) சமுத்திரராஜ், பொதுப்பணித்துறை கட்டிட பிரிவு பொறியாளர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story