தூத்துக்குடி மாவட்டத்தில் 14 லட்சம் வாக்காளர்கள் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில் 14 லட்சம் வாக்காளர்கள் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 23 Dec 2019 10:45 PM GMT (Updated: 23 Dec 2019 1:03 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் 2020 நேற்று தொடங்கி, அடுத்த மாதம் (ஜனவரி) 22- ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிடப்பட்டது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத் சிங் கலோன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில், தேர்தல் பிரிவு தாசில்தார் நம்பிராயர், அரசியல் கட்சி பிரதிநிதிகள் சந்தனம், ரவி, அக்னல், ராஜா, முத்து, சிவராமன், வரதராஜ், அசோக்குமார், முரளிதரன், மாடசாமி, சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் விளாத்திகுளம் தொகுதியில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 498 வாக்காளர்களும், தூத்துக்குடியில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 293 வாக்காளர்களும், திருச்செந்தூரில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 891 வாக்காளர்களும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 422 வாக்காளர்களும், ஓட்டப்பிடாரத்தில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 151 வாக்காளர்களும், கோவில்பட்டியில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 990 வாக்காளர்களும் உள்ளனர்.

மாவட்டத்தில் 6 லட்சத்து 95 ஆயிரத்து 726 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 22 ஆயிரத்து 407 பெண் வாக்காளர்கள், 112 திருநங்கைகள் ஆக மொத்தம் 14 லட்சத்து 18 ஆயிரத்து 245 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 10 ஆயிரத்து 505 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2020 பணியானது இன்று (அதாவது நேற்று) முதல், அடுத்த மாதம் (ஜனவரி) 22- ந்தேதி வரை நடக்கிறது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றுக்கு விண்ணப்ப படிவங்கள் பெறப்படும். மேலும், 1.1.2020 அன்று 18 வயது நிறைவடைய உள்ளவர்கள் அதாவது 31.12.2001 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்தவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத, 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.

இதற்கான சிறப்பு முகாம்கள் ஜனவரி மாதம் 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த முகாம்களிலும் விண்ணப்ப படிவங்களை கொடுத்து பயன்பெறலாம். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமனம் செய்ய வேண்டும். அவ்வாறு நியமிக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நாள் ஒன்றுக்கு மற்றவர்கள் சார்பாக அதிகபட்சமாக 10 மனுக்கள் அளிக்கலாம். சிறப்பு சுருக்க முறை திருத்த நாட்களில் முகவர்கள் மொத்தம் 30 மனுக்களுக்கு மேல் அளிக்கக்கூடாது. இந்த சிறப்பு முகாமுக்கு தேவையான படிவங்கள் ஒவ்வொரு தாலுகா அலுவலகங்கள் மூலம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் நியமன அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மற்றும் சிறப்பு முகாம் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

Next Story