தஞ்சை-திருவாரூர் இடையே மின்சார ரெயில் சோதனை ஓட்டம்


தஞ்சை-திருவாரூர் இடையே மின்சார ரெயில் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2019 10:45 PM GMT (Updated: 23 Dec 2019 10:28 PM GMT)

தஞ்சை-திருவாரூர் இடையே மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.

தஞ்சாவூர்,

கோவில்கள் நிறைந்த மாவட்டமாக திகழும் தஞ்சைக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ரெயில் பயணத்தையே பெரிதும் விரும்புகின்றனர்.

இந்த நிலையில் பயண நேரத்தை குறைக்கவும், இழுவை திறனை அதிகரிக்கவும் தற்போது நாடு முழுவதும் ரெயில்பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பலமாதங்கள் ஆகின்றன

சென்னையில் இருந்து விழுப்புரம் வரை மின்மயமாக்கும் பணி முடிவடைந்துள்ள நிலையில் கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம் வழியாக தஞ்சை வரையில் மின்மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருச்சியில் இருந்து தஞ்சை வரை முதல்கட்டமாக மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டது. இதனை தொடர்ந்து சோதனை ஓட்டமும் நடைபெற்று பல மாதங்கள் ஆகின்றன.

சோதனை ஓட்டம்

தஞ்சையில் இருந்து காரைக்கால் வரை மின்மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. தஞ்சையில் இருந்து திருவாரூர் வரையில் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்மயமாக்கும் பணிகள் முடிவடைந்தது. நேற்று முன்தினம் இரவு திடீரென மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.

திருச்சியில் இருந்து புறப்பட்ட இந்த சோதனை ரெயில் தஞ்சை வழியாக இரவு 9 மணிக்கு திருவாரூர் ரெயில் நிலையத்தை சென்றடைந்தது. இந்த சோதனை ஓட்டத்தில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அதை சரி செய்யும் பணிகள் நடக்கிறது.

திருவாரூரில் இருந்து காரைக்கால் வரையில் பணிகளை விரைந்து முடித்து ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என ரெயில் உபயோகிப்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story