பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற விவசாயி அடித்துக்கொலை 3 பேர் கைது


பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற விவசாயி அடித்துக்கொலை 3 பேர் கைது
x
தினத்தந்தி 24 Dec 2019 11:00 PM GMT (Updated: 24 Dec 2019 8:29 PM GMT)

கெங்கவல்லி அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கெங்கவல்லி,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டி ஊராட்சி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராமர் (வயது 40). விவசாயி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு விஷ்ணு (15), விக்னேஷ் (11) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாந்தி இறந்து விட்டார். இதனால் ராமர், தனது மகன்களுடன் வசித்து வந்தார்.

இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் அங்குள்ள ஏரிக்கரை குறவன் காலனி பகுதியில் உள்ளது. அதே பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (45). இவருடைய மனைவி கனகா (30). கலியமூர்த்தி, ராமரின் சித்தப்பா மகன் ஆவார். இவர்கள் 2 பேரின் தோட்டமும் அருகருகே அமைந்துள்ளது.

கோவிலில் சத்தியம்

இந்த நிலையில் ராமர், கலியமூர்த்தியின் மனைவி கனகாவிடம், அடிக்கடி கையை பிடித்து இழுத்து அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கனகா தனது கணவர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர்கள் ராமரை அழைத்து கண்டித்துள்ளனர். மேலும் அங்குள்ள கருப்பசாமி கோவிலில், இவ்வாறு தொந்தரவு செய்யக்கூடாது, தவறாக நடக்கக்கூடாது என்று சத்தியம் செய்ய கூறி உள்ளனர். ராமரும் சத்தியம் செய்துள்ளார்.

இதனிைடயே நேற்றுமுன்தினம் இரவு ராமர், தனது மகன்களிடம் தான் தோட்டத்து குடிசையில் உறங்க செல்வதாக கூறி சென்று விட்டார். ஆனால் நேற்று காலை 10 மணி ஆகியும் அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் அவரது தம்பி மனைவி மஞ்சுளா மற்றும் மகன்கள் விஷ்ணு, விக்னேஷ் ஆகியோர் சென்று பார்த்தனர். அப்போது தோட்டத்தில் மின்வயர்களை கையில் பிடித்தபடியே ராமர் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அடித்துக்கொலை

இது குறித்து கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர்கள் உமாசங்கர், முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் ராமரின் தலையில் படுகாயங்கள் இருந்தன. இதனால் அவரை அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் ராமரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், கலியமூர்த்தி, கனகா மற்றும் அவரது தந்தை ராமன் ஆகியோர் ராமரை கட்டையால் அடித்துக்கொன்றது தெரியவந்தது. அதாவது நேற்று முன்தினம் இரவு தோட்டத்துக்கு சென்ற ராமர், மீண்டும் கனகாவை தொந்தரவு செய்ததாகவும், தவறாக நடக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அவர் தனது தந்தை ராமன் மற்றும் கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் தோட்டத்துக்கு வந்த ராமன், கலியமூர்த்தி, கனகா மற்றும் 2 பேர் சேர்ந்து, மண்வெட்டியில் உள்ள கட்டையால் ராமரை அடித்தனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

3 பேர் கைது

மேலும் அவர்கள் மின்சாரம் தாக்கி இறந்தது போன்று அனைவரையும் நம்ப வைக்க, ராமரின் உடலை மின்சார வயர் அருகே போட்டு, வயரை அவரது கையில் பிடித்து இருப்பது போல வைத்து விட்டு சென்று விட்டனர். எனினும் போலீசார் விசாரணை நடத்தி அவர்கள் கொலை செய்ததை கண்டுபிடித்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து கலியமூர்த்தி, ராமன், கனகா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் கெங்கவல்லி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story