ஜோலார்பேட்டை அருகே, ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை பறிப்பு


ஜோலார்பேட்டை அருகே, ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 25 Dec 2019 10:15 PM GMT (Updated: 25 Dec 2019 1:19 PM GMT)

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 3 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

ஜோலார்பேட்டை,

கோவை அருகே உள்ள புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். அவருடைய மனைவி மகேஸ்வரி (வயது 29). இவர், சென்னையில் இருந்து நீலகிரி நோக்கி செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோவைக்கு செல்ல முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தார்.

சம்பவத்தன்று நள்ளிரவு ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்து கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் மகேஸ்வரி கழுத்தில இருந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து மகேஸ்வரி கோவை ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். சம்பவ நடந்த இடம் ஜோலார்பேட்டை ரெயில்வே காவல் எல்லைக்குள் இருப்பதால் அந்த புகாரை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதே போல் தேனி பெரியகுளம் பகுதியை சேர்ந்த ராமதாஸ் என்பவரது மகள் மதுமிதா (21). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி படித்து வருகிறார். இவர், சம்பவத்தன்று சென்னைக்கு செல்ல திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தார்.

ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்து கொண்டிருந்த போது மதுமிதா வைத்து இருந்த கைப்பையை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கல்லூரி மாணவி மதுமிதா சென்னை ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். சம்பவ நடந்த இடம் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் எல்லைக்குள் இருப்பதால் புகாரை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவங்கள் குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story