வங்கி அதிகாரி வீட்டில் 25 பவுன் நகை திருட்டு


வங்கி அதிகாரி வீட்டில் 25 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 25 Dec 2019 10:15 PM GMT (Updated: 25 Dec 2019 5:43 PM GMT)

ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் 25 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம் மேற்கு காமகோடி நகரைச் சேர்ந்தவர் சந்திரன்(வயது 69). ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியான இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருப்பதி சென்று விட்டார்.

அங்கு சாமி தரிசனம் முடிந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்றுபார்த்தபோது, படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் திருட்டு போய் இருப்பது தெரிந்தது. சந்திரன், குடும்பத்துடன் திருப்பதி சென்று இருப்பதை அறிந்த மர்மநபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்று உள்ளனர்.

இதுபற்றி வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Next Story