கொட்டும் மழையில் வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரம்


கொட்டும் மழையில் வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரம்
x
தினத்தந்தி 25 Dec 2019 10:45 PM GMT (Updated: 25 Dec 2019 7:48 PM GMT)

கொட்டும் மழையில் வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரம் செய்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் அந்தநல்லூர், மணிகண்டம், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, திருவெறும்பூர் ஆகிய 6 ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த ஒன்றியங்களில் நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்தது.

இந்த 6 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை தேர்தலை சந்திக்க இருக்கிறார்கள். இதன் காரணமாக இந்த 6 ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் நேற்று இறுதி கட்ட பிரசாரம் விறு விறுப்பாக நடந்தது. கொட்டும் மழைையயும் பொருட்படுத்தாது அவர்கள் பிரசாரத்தில் இறங்கினார்கள்.

கொட்டும் மழையில்...

வேட்பாளர்கள் தங்களது எல்லைக்கு உட்பட்ட கிராமங்களுக்கு வீடு, வீடாக சென்று தங்களது சின்னத்தை காட்டி வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டனர். மேலும் தங்களது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்றும் வாக்கு சேகரித்தனர். இதனால் பல கிராமங்கள் விழாக்கோலம் பூண்டு இருந்தது.

மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் மேக்குடி கிராமத்தில் மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் கொட்டும் மழையில் குைட பிடித்தபடி இறுதி கட்ட பிரசாரம் செய்தனர்.

பல கிராமங்களில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் கார்களிலும், வேன்களிலும், ஆட்டோக்களிலும் ஒலிபெருக்கி கட்டிக்கொண்டும், தங்களது சின்னத்துடன் கூடிய பதாகைகளை வைத்துக்கொண்டும் இறுதி கட்ட பிரசாரம் செய்தனர்.

குத்தாட்டம்

இதுபோல் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதல் தொடர்ந்து சாரல் மழை அவ்வபோது பெய்து கொண்டே இருந்தது. ஆனாலும் வேட்பாளர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதுமட்டுமின்றி வாக்காளர்களுக்கு வாக்கு சேகரிக்க சென்றோரும் ஆட்டம், பாட்டத்தில் ஈடுபட்டு மகிழ்ச்சியோடு வாக்கு சேகரித்தனர். இதே போல் சரக்குவாகனத்தில் வாக்கு சேகரிக்க சென்ற பெண்கள், வாகனத்தில் நின்று கொண்டு குத்தாட்டம் போட்டு அசத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில் அரசு ஊழியர்கள் கிராமம், கிராமமாக சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கினர்.


Next Story