6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற வாலிபருக்கு தூக்கு தண்டனை


6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற வாலிபருக்கு தூக்கு தண்டனை
x
தினத்தந்தி 27 Dec 2019 11:30 PM GMT (Updated: 27 Dec 2019 5:36 PM GMT)

6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

கோவை,

கோவையை அடுத்த துடியலூர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். சிறுமியின் தாய், தந்தை ஆகியோர் துப்புரவு பணி செய்து வருகின்றனர். கடந்த மாா்ச் மாதம் 25-ந் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு சிறுமி வீடு திரும்பினாள். சிறுமியின் பாட்டி வீட்டில் இருந்தார். மாலை 6 மணியளவில் சிறுமியின் பாட்டி தனக்கு வெற்றிலை வாங்கிவரச்சொல்லி அவளை கடைக்கு அனுப்பிவைத்தார். நீண்ட நேரமாகியும் சிறுமி வீடுதிரும்பவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த பாட்டி அந்த கடைக்கு சென்று கேட்டார். அப்போது கடையில் வெற்றிலை வாங்கிவிட்டு சென்று நீண்ட நேரம் ஆகிறது என்று கடைக்காரர் தெரிவித்தார். பின்னர் சிறுமியுடன் படிக்கும் தோழிகளின் வீடுகளுக்கு சென்று அவளை தேடினார். ஆனால் அங்கும் அவள் இல்லை.

இதற்கிடையே சிறுமியின் தாய் வேலையை முடித்துவிட்டு இரவு 7 மணியளவில் வீட்டிற்கு வந்தார். அப்போது மகள் காணாமல் போன விவரம் அறிந்து அதிர்ச்சியடைந்த தாய், தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து மகளை தேடிப்பார்த்தார். சிறுமியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து இரவு 8 மணியளவில் அந்த சிறுமியின் தாய் தடாகம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் விசாரணை நடத்தினர். அவர்களும் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் நள்ளிரவு 1 மணி வரை குழந்தையை தேடிப்பார்த்தனர்.

இந்தநிலையில், சிறுமியின் வீட்டின் அருகே இரண்டு கட்டிடங்களுக்கு இடையே சந்து பகுதியில், மறுநாள் (அதாவது மார்ச் 26-ந் தேதி) காலை 5.30 மணியளவில் உடலில் டி-சர்ட் சுற்றப்பட்ட நிலையில் சிறுமி பிணமாக கிடந்தாள். இதை அறிந்ததும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

பின்னர் இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

பின்னா் இந்த விசாரணை துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. சிறுமி கொலை தொடர்பாக போலீசார் 100-க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த ஒரு மூதாட்டியின் வீட்டில் வசித்து வந்த தொண்டாமுத்தூர் உளியம்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 34) உள்பட 7 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

போலீசார் சந்தோஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.

சந்தோஷ்குமார் கட்டிட உள் அலங்கார வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஆனால் அவரது நடவடிக்கை பிடிக்காமல் திருமணமான ஒரு மாதத்திலேயே மனைவி பிரிந்து சென்று விட்டார். மேலும் சந்தோஷ்குமார் துடியலூர் பகுதியில் சிறுமியின் பக்கத்து வீட்டில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றபோது சிறுமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமிக்கு அவர் சாக்லெட், பிஸ்கெட் வாங்கி கொடுத்து நன்றாக பேசி வந்துள்ளார். சம்பவத்தன்று சந்தோஷ்குமாரின் பாட்டி வயது முதிர்வு காரணமாக இறந்துவிட்டார். அவருடைய உடல் வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது.

அப்போது சிறுமியை பாட்டி வீட்டுக்கு அழைத்து வந்து, மற்றொரு அறையில் வைத்து சந்தோஷ்குமார் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். சிறுமி நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லிவிடுவாள் என்று பயந்து போன சந்தோஷ்குமார் சிறுமியின் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்து உள்ளார். பின்னர் கொலை செய்ததற்கான அடையாளங்களை மறைக்கும் விதமாக இரவு நேரத்தில் சிறுமியின் உடலை தான் அணிந்து இருந்த டீ-சர்ட்டால் சுற்றி ஒரு சந்து பகுதிக்குள் போட்டுவிட்டு ஒன்றும் அறியாதவர் போல் வீட்டுக்கு வந்துவிட்டார். மேற்கண்டவை போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சந்தோஷ்குமார் மீது போக்சோ, 302 (கொலை), 201 (தடையத்தை மறைத்தல்) ஆகிய 3 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு விசாரணை கோவை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. கோவையில் போக்சோ சட்டத்திற்காக போக்சோ சிறப்பு கோர்ட்டு கடந்த 18-ந்தேதி தொடங்கப்பட்டது. எனவே இந்த வழக்கு விசாரணை போக்சோ சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

சிறப்பு கோர்ட்டு நீதிபதி ராதிகா (பொறுப்பு) வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்தார். இந்த வழக்கில் மொத்தம் 26 பேர் சாட்சியம் அளித்தனர். தொடர்ந்து சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை நடைபெற்றது. வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் சங்கரநாராயணன் ஆஜராகி சந்தோஷ்குமாருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று வாதாடி வந்தார்.

இந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில் 27-ந் தேதி தீர்ப்பு கூறப்படும் (அதாவது நேற்று) என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று காலை 10 மணியளவில் கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சந்தோஷ் குமாரை முகத்தை மூடியவாறு போலீசார் பாதுகாப்புடன் கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.

நீதிபதி ராதிகா காலை 10.15 மணிக்கு கோர்ட்டுக்கு வந்தார். அப்போது சந்தோஷ்குமார் குற்றவாளி கூண்டில் நின்றார். அவரை பார்த்து உங்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு இருப்பதால் நீங்கள் குற்றவாளி. உனக்கு அதிகபட்ச தண்டனை வழங்க உள்ளேன். எனவே இது பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று நீதிபதி ராதிகா கேட்டார். அதற்கு சந்தோஷ் குமார் இந்த வழக்கு அவசரகதியில் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. யாரோ செய்த குற்றத்துக்கு நான் தண்டனை அனுபவிக்கிறேன் என்று பதில் அளித்தார். இதைத்தொடர்ந்து சந்தோஷ்குமார் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்தார். அத்துடன் தண்டனை விவரம் மாலை 3 மணிக்கு மேல் அறிவிக்கப்படும் எனவும் அவர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து பாதுகாப்பு காரணமாக சந்தோஷ்குமாரை போலீசார் மீண்டும் கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மதியம் 2.30 மணியளவில் போலீசார் சிறையில் இருந்து சிறப்பு கோர்ட்டுக்கு மீண்டும் அழைத்து வந்தனர். சந்தோஷ்குமாருக்கு அளிக்கப்படும் தீர்ப்பு விவரங்களை அறிவதற்காக சிறுமியின் தாய் மற்றும் உறவினர்கள், மாதர் சங்கத்தினர் உள்பட ஏராளமானோர் கோா்ட்டு முன்பு திரண்டனர். கோர்ட்டுக்கு மாலை 3 மணிக்கு நீதிபதி ராதிகா வந்தார். பின்னர் அவர் தீர்ப்பை வாசித்தார். அதில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302 (கொலை) பிரிவின் கீழ் தூக்கு தண்டனையும், போக்சோ சட்டப்பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும், 201 (தடயத்தை மறைத்தல்) பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி ராதிகா பரபரப்பு தீர்ப்பு கூறினார்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சந்தோஷ் குமாரை போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற வாலிபருக்கு கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story