பேரூர் அருகே, 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


பேரூர் அருகே, 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 27 Dec 2019 10:00 PM GMT (Updated: 27 Dec 2019 5:42 PM GMT)

பேரூர் அருகே 3 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவசி தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பேரூர், 

கோவையை அடுத்த பேரூர் அருகே ஆறுமுகக் கவுண்டனூர், ரோஜா நகரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 65). இவர், விசைத்தறி கூடம் வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்று விட்டார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை இவரது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் தங்கவேலுவுக்கும், பேரூர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்ரோஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

இதற்கிடையே தங்கவேலுவும் வீட்டுக்கு விரைந்து வந்து பாாத்தார். இதில் வீட்டில் இருந்து தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போய் இருந்தது தெரியவந்தது. மேலும் ஆய்வு செய்ததில் தங்கவேலு வீட்டின் அருகே வசித்து வந்த சோமநாதன் மற்றும் கனகவேல் ஆகியோரின் வீட்டிலும் நகை, பணம் திருடு போய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வெளியூர் சென்று இருந்த அவர்கள் 2 பேருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி சோதனை செய்து வருகின்றனர். மேலும் 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story