சூதாட்டம், லாட்டரியை அனுமதித்தால் புதுச்சேரியின் சமூக சூழல் மாறிவிடும் - டுவிட்டரில் கிரண்பெடி கருத்து


சூதாட்டம், லாட்டரியை அனுமதித்தால் புதுச்சேரியின் சமூக சூழல் மாறிவிடும் - டுவிட்டரில் கிரண்பெடி கருத்து
x
தினத்தந்தி 27 Dec 2019 11:15 PM GMT (Updated: 27 Dec 2019 8:18 PM GMT)

சூதாட்டம், லாட்டரியை அனுமதித்தால் புதுச்சேரியின் சமூக சூழல் மாறிவிடும் என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார். புதுவை கவர்னர் கிரண்பெடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி, 

வளர்ச்சி என்ற பெயரில் வரும் சூதாட்டம், லாட்டரி, மார்க்கெட்டில் மது விற்பனை போன்றவற்றில் விழிப்புடன் இருக்கவேண்டும். புதுச்சேரி மக்கள் சூதாட்டத்தை விரும்பவில்லை. இதனால் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழப்பார்கள்.

தங்கள் குழந்தைகள் சுரண்டப்படுவதையும் மக்கள் விரும்பவில்லை. சூதாட்ட விடுதி, மதுபான விற்பனை நிலையங்களை எளிதாக்குவதற்கு நாங்கள் உடன்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

நமது மாணவர்கள் சூதாட்டம் மற்றும் மது குடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகி இருப்பார்கள். இது புதுவை பிராந்தியத்திலுள்ள சுத்தமான சுற்றுலா சூழலை மாசுபடுத்தியிருக்கும். எல்லா இடங்களில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகளின் தரத்தையும் பாதித்திருக்கும்.

சர்வதேச அளவில் இன்னும் சில ஆண்டுகளில் புதுச்சேரியின் சமூக மற்றும் ஆன்மிக சூழல் மாறியிருக்கும். சிலரின் சொந்த நலன்களுக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் சிதைந்திருக்கும்.

சமூக சூழலை மாசுபடுத்தும் சூதாட்டம் போன்ற ஓநாய்களை புதுவை மக்களிடம் இருந்து தள்ளியே வைத்துள்ளோம். இதுபோன்ற ஓநாய்கள் வளர்ச்சி என்ற பெயரில் நுழையாத அளவுக்கு பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Next Story