தஞ்சை பெரியகோவிலில் கும்பாபிஷேகம்: புனிதநீர் எடுத்துச்செல்ல விமானகோபுரத்தை சுற்றி பலகைகள் அமைப்பு


தஞ்சை பெரியகோவிலில் கும்பாபிஷேகம்: புனிதநீர் எடுத்துச்செல்ல விமானகோபுரத்தை சுற்றி பலகைகள் அமைப்பு
x
தினத்தந்தி 28 Dec 2019 10:30 PM GMT (Updated: 28 Dec 2019 4:55 PM GMT)

தஞ்சை பெரியகோவிலில் பிப்ரவரி 5-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி புனித நீர் எடுத்துச்செல்வதற்காக விமானகோபுரத்தை சுற்றி பலகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இது கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தஞ்சை பெரியகோவிலில் 1996-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் 5-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பெரியகோவிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

பாலாலயம்

குறிப்பாக பெரியகோவிலில் தரைதளம் சீரமைப்பு, புல்தரை சீரமைப்பு, கோபுரங்கள் சுத்தப்படுத்தும் பணி, பெருவுடையார், பெரியநாயகி அம்மன், விநாயகர், முருகன் சன்னதிகளின் கோபுரங்களும் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. கோவில் வளாகத்தில் உள்ள திருச்சுற்று மாளிகை சீர் செய்யப்பட்டு அங்குள்ள லிங்கங்களை பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தொடாத வகையில் தடுப்புக்கட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 2-ந்தேதி பாலாலயம் நடந்தது. இதைத்தொடர்ந்து அனைத்து மூலவர் சன்னதிகளும் நடைசாத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. பாலாலயம் முடிந்த பின்னர் பாலாலய திருமேனிகளில் அருட்சக்தியானது வேதாசிகம முறைப்படி சேர்க்கப்பட்டு, அவைகள் மட்டுமே பெருவுடையார் சன்னதி முன் உள்ள மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக எழுந்தருள செய்யப்பட்டன. தற்போது அதனை பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.

கூட்டம் அலைமோதியது

தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டுத்தேர்வு விடுமுறைவிடப்பட்டுள்ளதால் பெரியகோவிலுக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகஅளவில் உள்ளது. அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். நேற்று வழக்கத்தை விட அதிகமாக கூட்டம் காணப்பட்டது. அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள், ஆதிபராசக்தி பக்தர்கள் என ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்தில் யாகசாலை பூஜை நடைபெறுகிறது. இதற்காக இரும்புத்தூண்கள் அமைக்கப்பட்டு தகரப்பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விமான கோபுரம்

தஞ்சை பெரியகோவிலில் 216 அடி விமான கோபுரம் உள்ளது. இந்த கோபுரமும் ரசாயன கலவை மூலம் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த விமானகோபுரத்தை சுற்றிலும் கும்பாபிஷேகத்தின்போது புனிதநீர் கலசங்கள் எடுத்துச்செல்லும் வகையில் பலகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் கிழக்கு திருச்சுற்று மண்டபத்திலும் லிங்கங்கள் இருக்கும் இடத்தில் புதிதாக தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டு தரைதளமும் சீர் செய்யப்பட்டு வருகின்றன.

Next Story