பா.ம.க. நிர்வாகி அடித்துக்கொலை? உறவினர்கள்-அரசியல் கட்சியினர் சாலை மறியலால் பரபரப்பு


பா.ம.க. நிர்வாகி அடித்துக்கொலை? உறவினர்கள்-அரசியல் கட்சியினர் சாலை மறியலால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 Dec 2019 11:00 PM GMT (Updated: 28 Dec 2019 6:21 PM GMT)

பள்ளிபாளையம் அருகே உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடி முகவராக பணியாற்றிய பா.ம.க. நிர்வாகி அடித்துக்கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள், அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வெப்படை அருகே உள்ள ரங்கனூர் அம்மா நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் என்கிற சுரே‌‌ஷ் (வயது 35). இவர் பள்ளிபாளையம் பா.ம.க. கிழக்கு ஒன்றிய துணை தலைவராக இருந்தார். பெயிண்டராகவும் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி பூங்கொடி. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். நேற்று முன்தினம் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் எலந்தகுட்டை ஊராட்சியில் கட்சியின் வாக்குச்சாவடி முகவராக பணியாற்றினர்.

பின்னர் மாலையில் சுரே‌‌ஷ் தனது தந்தையை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெப்படை பஸ்நிலையத்திற்கு அழைத்துக்கொண்டு வந்துள்ளார். அங்கு அவர் தனது தந்தையை அங்கு இறக்கிவிட்டு, மீண்டும் தேர்தல் பணியாற்ற சென்றுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் சுரே‌‌ஷ் வீடு திரும்பவில்லை. இதனால் சுரே‌‌ஷ் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு கல் குவாரி குட்டையில் சுரே‌‌ஷ் பிணமாக மிதந்தார். மேலும் அந்த குட்டையின் அருகே சுரே‌ஷின் செருப்பும், மோட்டார் சைக்கிளும் கிடந்தது. இதைப்பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் பள்ளிபாளையம் போலீசார் மற்றும் குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தீயணைப்பு வீரர்கள் கல்குவாரி குட்டையில் இறந்து கிடந்த சுரே‌ஷின் உடலை மீட்டனர்.

இதையறிந்த சுரே‌ஷின் மனைவி பூங்கொடி மற்றும் அவருடைய உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் சுரே‌ஷின் உடலை பார்த்து கதறி அழுதனர். அதன்பின்பு சுரே‌‌ஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சுரே‌‌ஷ் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பா.ம.க., கம்யூனிஸ்டு கட்சியினர் வெப்படை பஸ்நிறுத்த பகுதியில் உள்ள 4 ரோட்டிற்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் கூறுகையில், சுரேசை யாரோ அடித்துக்கொலை செய்து விட்டார்கள். இதில் தொடர்புடையவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும். அதுவரை சுரே‌‌ஷ் உடலை வாங்க மாட்டோம் என்றனர்.

இதைக்கேட்ட போலீசார், சுரே‌ஷின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவர் எவ்வாறு இறந்தார் என்பதற்கான காரணம் தெரியவரும். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்..

இதுகுறித்து பூங்கொடி பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சுரே‌ஷின் சாவை சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தேர்தல் பிரச்சினை காரணமாக சுரே‌‌ஷ் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே சுரே‌ஷின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு சுரே‌‌ஷ் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பள்ளிபாளையம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story