வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்ட அறைகளுக்கு `சீல்' வைப்பு தேர்தல் பார்வையாளர்-கலெக்டர் தலைமையில் நடந்தது


வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்ட அறைகளுக்கு `சீல் வைப்பு தேர்தல் பார்வையாளர்-கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 28 Dec 2019 11:00 PM GMT (Updated: 28 Dec 2019 7:24 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த 3 ஊராட்சி ஒன்றியங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறைகள் தேர்தல் பார்வையாளர்- கலெக்டர் ஆகியோர் தலைமையில் பூட்டி ‘சீல்‘ வைக்கப்பட்டது.

அரியலூர்,

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடந்த அரியலூர், செந்துறை, திருமானூர் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 522 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்கு பெட்டிகள் நேற்று முன்தினம் மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குச்சாவடி அலுவலர்களால் ‘சீல் ' வைக்கப்பட்டன.

பின்னர் அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 168 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்கு பெட்டிகள் லாரிகள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன், அதற்கான வாக்கு எண்ணும் மையமான அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு நேற்று காலை வரை கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன. இதேபோல் செந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 164 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்கு பெட்டிகள் செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், திருமானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 190 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்கு பெட்டிகள் கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

‘சீல்’ வைப்பு

முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த 3 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட வாக்கு பெட்டிகள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, போலீசாரின் மூன்றடுக்கு பாதுகாப்புடன் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ராஜசேகர், கலெக்டர் ரத்னா ஆகியோர் தலைமையில், அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பூட்டி ‘சீல்‘ வைக்கப்பட்டது.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், வருவாய் அதிகாரி (பொறுப்பு) பாலாஜி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள், போலீசார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் வாக்கு பெட்டிகள் உள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்கள் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையம் தகுந்த பாதுகாப்பு வசதிகளுடனும், அடிப்படை வசதிகளுடனும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Next Story