வையம்பட்டி அருகே குடும்பத்தகராறில் மண்எண்ணெய் ஊற்றி பெண் தீக்குளித்து தற்கொலை


வையம்பட்டி அருகே குடும்பத்தகராறில் மண்எண்ணெய் ஊற்றி பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 28 Dec 2019 10:15 PM GMT (Updated: 28 Dec 2019 7:31 PM GMT)

வையம்பட்டி அருகே குடும்பத்தகராறில் மண்எண்ணெய் ஊற்றி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எரியும் நெருப்புடன் சாலையில் ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வையம்பட்டி,

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள பொன்னாக் கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் சரத் பாபு. இவருடைய மனைவி சங்கீதா (வயது 27). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்பின்னர், வையம்பட்டி ஒன்றியத்துக்கு உள்ளாட்சி தேர்தல் நடந்ததால் வீட்டில் இருந்த அனைவரும் தேர்தலில் ஓட்டு போட வாக்குச்சாவடிக்கு சென்றுவிட்டனர்.

பெண் தீக்குளிப்பு

அப்போது வீட்டில் தனியாக இருந்த சங்கீதா, வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் அவருடைய உடல் முழுவதும் தீப்பற்றியது. இதனால் வலி தாங்க முடியாமல் உடலில் எரியும் நெருப்புடன் அவர் வெளியே வந்து சாலையில் ஓடிவந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்பத்தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story