திருவள்ளூர் அருகே பெண் கடத்தலை தடுத்த வாலிபர் ஆட்டோ ஏற்றி கொலை - டிரைவர் கைது


திருவள்ளூர் அருகே பெண் கடத்தலை தடுத்த வாலிபர் ஆட்டோ ஏற்றி கொலை - டிரைவர் கைது
x
தினத்தந்தி 29 Dec 2019 11:15 PM GMT (Updated: 29 Dec 2019 8:08 PM GMT)

திருவள்ளூர் அருகே பெண் கடத்தலை தடுத்த வாலிபர் ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில் போலீஸ் நிலையம் அருகே கூட்டு சாலையில் கடந்த 26-ந்தேதி மாலை 6 மணியளவில் மாரிமங்கலம் கிராமத்தை சேர்ந்த பவானி (வயது 38) என்பவர் நரசிங்கபுரம் செல்ல நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆட்டோவில் அவர் ஏறினார்.

அவருடன் பயணிகளும் ஏறி கொண்டனர். வழியில் மற்ற பயணிகள் இறங்கி விட்டநிலையில் பவானி மட்டும் ஆட்டோவில் இருந்தார். அந்த ஆட்டோ நரசிங்கபுரம் செல்லாமல் கொண்டஞ்சேரி பகுதியில் இருந்து கடம்பத்தூர் செல்லும் சாலையில் வேகமாக சென்றது. இதையடுத்து பவானி ஆட்டோவை நிறுத்துமாறு கத்தினார்.

ஆனால் டிரைவர் ஆட்டோவை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். இதனால் மேலும் பதற்றம் அடைந்த பவானி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டார்.

பெண் கடத்தப்படுவதை அறிந்து கொண்டஞ்சேரி பகுதியை சேர்ந்த யாகேஷ் (22), ஈஸ்டர் (19), வினித், துரைராஜ் மற்றும் சார்லி ஆகியோர் 2 மோட்டார் சைக்கிள்களில் அந்த ஆட்டோவை விரட்டிச்சென்றனர்.

இந்தநிலையில் தப்பிப்பதற்காக பவானி ஆட்டோவில் இருந்து கீழே குதித்தார். இதனால் சாலையில் விழுந்தார். இதையடுத்து ஆட்டோ நிற்காமல் சென்றது. இதை பார்த்த, மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள் ஆட்டோவை விடாமல் வெகுதூரம் துரத்திச் சென்றனர். இதனால் ஆட்டோ டிரைவர் அந்த மோட்டார் சைக்கிள்களை இடித்து தள்ளி விட்டு நிற்காமல் தப்பிச் சென்றுவிட்டார். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த யாகேஷ் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரது நண்பர்கள் அவரை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு யாகேசுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு யாகேஷ் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து மப்பேடு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரான பிஞ்சிவாக்கத்தை சேர்ந்த கேசவன்( 30) என்பவரை கைது செய்து ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

Next Story