திருவரங்குளம் ஒன்றிய உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு


திருவரங்குளம் ஒன்றிய உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 30 Dec 2019 11:00 PM GMT (Updated: 30 Dec 2019 3:32 PM GMT)

திருவரங்குளம் ஒன்றிய உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

திருவரங்குளம்,

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 48 ஊராட்சிகள், 25 ஒன்றியக்குழு வார்டுகள், 3 மாவட்ட ஊராட்சி வார்டுகள் உள்ளன. மேலும் 387 ஊராட்சி வார்டுகள் உள்ளன. இவற்றின் பதவிகளுக்கான தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 57 ஆயிரத்து 434 ஆண் வாக்காளர்கள், 57 ஆயிரத்து 879 பெண் வாக்காளர்கள், ஒரு இதர வாக்காளர் என மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரத்து 314 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் நேற்று மதியம் 1 மணி வரை 70 ஆயிரத்து 46 வாக்காளர்கள் ஓட்டுப்போட்டு இருந்தனர். இது 60.74 சதவீதம் ஆகும். இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம், அறந்தாங்கி, அரிமளம், திருமயம், பொன்னமராவதி, ஆவுடையார்கோவில் மணமேல்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மதியம் 1 மணி வரை 2 லட்சத்து 98 ஆயிரத்து 2 பேர் ஓட்டுப்போட்டு இருந்த னர். இது 51.47 சதவீதம் ஆகும்.

நீண்ட வரிசையில் காத்திருந்து...

ஆண்கள், பெண்கள் தனித் தனியாக நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர். திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 246 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இவற்றில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மட்டும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்குச்சாவடி மையங்களில் பந்தல்கள் அமைக்காததால், வாக்களிக்க வந்தவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

ஊராட்சி மன்ற தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என 4 வாக்குகள் அளிக்க வேண்டி இருந்ததால், முதியவர்கள் மற்றும் பெண்கள் சிறிது அவதிப்பட்டனர். இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

வாக்குச்சாவடி அருகே பிரசாரம்

திருவரங்குளம் ஒன்றியங்களில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடியின் அருகே வேட்பாளர் மற்றும் வேட்பாளரின் ஆதரவாளர்கள் ஓட்டுப்போட வந்தவர்களிடம் தங்களது சின்னத்திற்கு வாக்களியுங்கள் எனக்கூறி பிரசாரம் செய்தனர். இதனால் ஒவ்வொரு வாக்குச்சாவடியின் அருகே சுமார் 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சியினர் நின்று கொண்டே இருந்தனர். சில இடங்களில் வாக்குச்சாவடி மையத்திற்கு செல்ல முடியாத பொதுமக்களை அப்பகுதியில் உள்ள அரசியல் கட்சியினர் மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றில் அழைத்து வந்து, வாக்களிக்க செய்த னர்.

வாக்குப்பதிவு மையங்களின் அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் அவ்வப்போது வந்து ஆய்வு செய்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், ஊர்காவல் படையினருக்கு ஆலோசனைகளை வழங்கி சென்றனர்.

கலெக்டர் ஆய்வு

திருமயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடைபெறும் வாக்குப்பதிவினை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான உமாமகேஸ்வரி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், அனைத்து இடங்களிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும் வாக்குச்சாவடிகளை தொடர்ந்து கண்காணித்து அமைய பெற்று உள்ள பாதுகாப்பு, வாக்குப்பதிவு நிலவரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை உடனுக்குடன் தேர்தல் ஆணையத்திற்கு தகவலாக அனுப்பி வைக்கப்படுகிறது என்றார்.

Next Story