செந்துறையில் தேர்தல் பணிக்கு சென்ற என்ஜினீயர் வீட்டில் 30 பவுன் நகைகள் கொள்ளை


செந்துறையில் தேர்தல் பணிக்கு சென்ற என்ஜினீயர் வீட்டில் 30 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 30 Dec 2019 11:15 PM GMT (Updated: 30 Dec 2019 5:19 PM GMT)

செந்துறையில் தேர்தல் பணிக்கு சென்ற என்ஜினீயர் வீட்டில் 30 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறையில் இருந்து இலங்கைச்சேரி செல்லும் பாதையில் உள்ள பாரதியார் நகரை சேர்ந்தவர் காமராஜ்(வயது 54). இவர் ஜெயங்கொண்டம் ஒன்றிய அலுவலகத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் காமராஜ் உள்ளாட்சி தேர்தல் பணிக்காக நேற்று முன்தினம் சென்று விட்டார். மேலும் அவரது மனைவி எழிலரசியும் தனது 2 மகள்களுடன் அப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள அவரது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை அறிந்த மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவு பின்பக்கம் வழியாக சென்று, கதவுகளை போலி சாவி கொண்டு திறந்து உள்ளே சென்றனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்த 30 பவுன் நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

பின்னர் கைரேகை பதிவு கிடைக்காமல் இருப்பதற்காக வீட்டின் பூட்டுகளை மர்மநபர்கள் அருகே இருந்த தண்ணீர் வாளியில் போட்டுவிட்டு சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் எழிலரசி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து தனது உறவினர்கள் மற்றும் செந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து மேப்பநாய் டிக்சி வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதுகுறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story