மண்ணச்சநல்லூர் ஒன்றியம் வலையூர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கம்; வாக்குச்சாவடி முற்றுகை


மண்ணச்சநல்லூர் ஒன்றியம் வலையூர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கம்; வாக்குச்சாவடி முற்றுகை
x
தினத்தந்தி 30 Dec 2019 11:00 PM GMT (Updated: 30 Dec 2019 5:39 PM GMT)

மண்ணச்சநல்லூர் ஒன்றியம் வலையூர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதால் 40-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடியை திடீரென முற்றுகையிட்டனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2-ம் கட்ட வாக்குப்பதிவு லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தாத்தையங்கார்பேட்டை, தொட்டியம், துறையூர், உப்பிலியபுரம் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

வலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு மாவட்ட ஊராட்சி 8-வது வார்டு கவுன்சிலர் பதவி, ஊராட்சி ஒன்றிய 4-வது வார்டு கவுன்சிலர் பதவி மற்றும் வலையூர் பஞ்சாயத்து தலைவர் பதவி, கிராம பஞ்சாயத்து 1, 2 ஆகிய வார்டுகள் ஆகியவற்றுக்கு வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு பெரும்பாலும் முதியவர்கள் ஆர்வமாக வாக்களிக்க வந்ததை காண முடிந்தது.

வலையூர் பஞ்சாயத்தில் 1 முதல் 9 வார்டுகள் உள்ளன. வலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நேற்று 40-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க வந்தனர்.

பெயர்கள் நீக்கம்

அப்போது அவர்களின் பெயர்களை பட்டியலில் சரிபார்த்தபோது, பெயர்கள் ‘டெலிட்டடு’ என முத்திரை குத்தப்பட்டு நீக்கம் செய்யப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வாக்களிக்கும் உரிமை இல்லை என்று வாக்குப்படிவத்தில் உள்ளது என்பதால் அனுமதிக்க முடியாது என வாக்குச்சாவடி அலுவலர்கள் தெரிவித்தனர்.

நாங்கள் உயிருடன் இருக்கும்போதே எங்களது பெயரை எப்படி? நீக்கம் செய்யலாம் என்று கூறி அவர்கள் வாக்குச்சாவடி முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாலகிரு‌‌ஷ்ணன், அவரது மனைவி மகேசுவரி, ரெங்கசாமி, அவரது மனைவி பிச்சாயி, நல்லம்மாள், செல்லம்மாள், வேம்பு, சண்முகம், அவரது மனைவி காந்திமதி, சுந்தரராஜன், அவரது மனைவி சாந்தா, மகள் சாலினி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டிருந்தது. அந்த பெயர்கள் வேறு வார்டில் இடம் பெற்றிருப்பதாகவும் சிலர் கூறினார்கள்.

போலீசார் குவிப்பு

இதுகுறித்த தகவல் அறிந்ததும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் பேசி, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க முடியாது என அறிவுறுத்தினர். பெயர் எப்படி நீக்கம் செய்யப்பட்டது என்பது குறித்து உரிய விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என்றனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குகள் பதிவு செய்யப் பட்டன.

ஏலம் விடப்பட்ட பதவிகள்

வலையூர் பஞ்சாயத்தில் வலையூர், பாலையூர், கரியமாணிக்கம், கன்னியாக்குடி ஆகிய கிராமங்களை கொண்டதாகும். ஏற்கனவே, வலையூர் பஞ்சாயத்து தலைவர் பதவி ரூ.10 லட்சத்திற்கும், துணைத்தலைவர் பதவி ரூ.3 லட்சத்திற்கும், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய 4-வது வார்டு கவுன்சிலர் பதவி ரூ.14 லட்சத்திற்கும் ஏலம் விட முயற்சி நடந்ததாக ஏற்கனவே மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் சிவராசு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் மூலம் பதவிகள் ஏலம் விடப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்த பதவிகளுக்கான தேர்தல் நடந்த வலையூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி வாக்குச்சாவடியில்தான், வாக்காளர் பட்டியலில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் முற்றுகையிட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story