ரிஷிவந்தியம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; 2 பேர் பலி
ரிஷிவந்தியம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரிஷிவந்தியம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கரடி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் மகன் தீனா(வயது 20). இவர் தனது நண்பரான லா.கூடலூரை சேர்ந்த பாலு மகன் அஜித்(20) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் பிரிவிடையாம்பட்டில் உள்ள தனது பாட்டியை பார்ப்பதற்காக சென்றார். ரிஷிவந்தியம் -திருக்கோவிலூர் சாலையில் ரிஷிவந்தியம் அடுத்த வெங்கலம் காலனி அருகே சென்ற போது திருக்கோவிலூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற அரசு பஸ் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட தீனா, அஜித் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான தீனா, அஜித் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story