2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் அமைச்சர் கே.பி.அன்பழகன், ஜி.கே.மணி வாக்களித்தனர்


2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் அமைச்சர் கே.பி.அன்பழகன், ஜி.கே.மணி வாக்களித்தனர்
x
தினத்தந்தி 30 Dec 2019 11:00 PM GMT (Updated: 30 Dec 2019 10:26 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 2-ம்கட்ட உள்ளாட்சி தேர்தலில் அமைச்சர் கே.பி.அன்பழகன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் வாக்களித்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. 5 ஊராட்சி ஒன்றியங்களிலும் காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சிதலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கு வாக்களிக்க ஒவ்வொரு வாக்காளருக்கும் 4 வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவி மல்லிகாவுடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட ஏரியூர், கடத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் உள்பட 10 ஊராட்சி ஒன்றியங்களில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும். தமிழக அரசு நிறைவேற்றிவரும் திட்டங்களுக்கு மக்கள் நல்லாதரவை தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவர் கூறினார்.

ஜி.கே.மணி

இதேபோன்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜம்பட்டி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். பி.என்.பி.இன்பசேகரன் எம்.எல்.ஏ. பென்னாகரம் ஒன்றியம் சாலை குள்ளாத்திரம்பட்டி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மனைவி பிரவீனா மற்றும் குடும்பத்தினருடன் வாக்களித்தார். இதேபோன்று 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் தங்கள் வாக்கு களை பதிவு செய்தனர்.


Next Story