ஓட்டப்பிடாரத்தில் தேர்தல் தகராறு: அ.தி.மு.க. தொண்டர் கொலையில் 8 பேர் சிக்கினர் மேலும் 4 பேருக்கு வலைவீச்சு


ஓட்டப்பிடாரத்தில் தேர்தல் தகராறு: அ.தி.மு.க. தொண்டர் கொலையில் 8 பேர் சிக்கினர் மேலும் 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 31 Dec 2019 11:00 PM GMT (Updated: 31 Dec 2019 9:22 PM GMT)

ஓட்டப்பிடாரத்தில் தேர்தல் தகராறில் அ.தி.மு.க. தொண்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் சிக்கினர். மேலும், 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓட்டப்பிடாரம்,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் யூனியன் பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது மேட்டூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அருகே இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் அரிவாளால் தாக்கினர். இதில் ஒரு தரப்பை சேர்ந்த மாசாணசாமி (வயது 54), மற்றும் அவரது ஆதரவாளரான முத்துசாமி மகன் சேசு என்ற சண்முகசுந்தரம் (55), சண்முகவேல் மகன் ராமசாமி (45) ஆகிய 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

மற்றொரு தரப்பை சேர்ந்த ஓட்டப்பிடாரம் பச்சைபெருமாள் (55), அவரது மகன் ஜெயமுருகன் (28) ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. உடனே, காயம் அடைந்த 5 பேரையும் ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

படுகொலை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இருதரப்பு ஆதரவாளர்களும் ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். அப்போது ஓட்டப்பிடாரம் தெற்கு தெருவை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் மாரியப்பன் (58) ஆஸ்பத்திரி அருகே நின்று கொண்டு இருந்தார். இவர் வேட்பாளர் இளையராஜா என்பவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தாராம்.

இதனால் அங்கு வந்த சிலர் மாரியப்பனை விரட்டி சென்று கல்லால் அடித்தும், ஆயுதங்களால் தாக்கியும் படுகொலை செய்தனர். இதன் காரணமாக ஓட்டப்பிடாரம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதை தொடர்ந்து ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பாதுகாப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த தென்மண்டல ஐ.ஜி சண்முகராஜேசுவரன், நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன் மற்றும் போலீசார் ஓட்டப்பிடாரம் பகுதிக்கு வந்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து ஓட்டப்பிடாரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

8 பேர் சிக்கினர்

இதுதொடர்பாக ஓட்டப்பிடாரம் போலீசார் நடத்திய விசாரணையில், எதிர்தரப்பை சேர்ந்த மாசாணசாமி, சண்முகசுந்தரம், ராமசாமி, முத்துமுருகன், ஆரோக்கியரவி, சதீ‌‌ஷ்குமார், தங்கமகராஜா, மணி ஆகிய 8 பேர் சிக்கினர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் மாசாணசாமி, சண்முகசுந்தரம், ராமசாமி ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒருவரைபோலீசார் மடக்கி பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதேபோன்று, மேட்டூர் வாக்குச்சாவடி அருகே இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவம் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 9 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story