சபரிமலை சீசனையொட்டி குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது


சபரிமலை சீசனையொட்டி குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 31 Dec 2019 11:00 PM GMT (Updated: 31 Dec 2019 10:29 PM GMT)

சபரிமலை சீசனையொட்டி குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

தென்காசி,

தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமானது, தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலமாகும். சீசன் காலங்களான ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மாதங்களில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் விழும். இங்கு குளிக்க தமிழ்நாடு மட்டும் அல்லாமல் வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்தும், சாரல் மழையில் நனைந்தும் இயற்கையை அனுபவித்து செல்வார்கள்.

சீசன் முடிந்தபிறகு வடகிழக்கு பருவமழையிலும் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் விழும். இதிலும் சுற்றுலா பயணிகள், கேரள பயணிகள் வந்து குளித்து செல்வது வழக்கம். தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிவித்துள்ள அய்யப்ப பக்தர்கள் அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் வழியில் குற்றாலம் வந்து அருவியில் குளித்துவிட்டு குற்றாலநாதரை வழிபட்டு செல்கிறார்கள்.

அய்யப்ப பக்தர்கள்

நேற்று அதிகாலையில் குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வருடத்தின் கடைசி நாள் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அதிகமாக இருந்தது. மதியம் தென்காசி- குற்றாலம் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதை போக்குவரத்து பிரிவு போலீசார் வந்து சரிசெய்தனர். இதையொட்டி குற்றாலத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story