திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மயக்க லட்டு கொடுத்து பயணிகளிடம் நகைகளை திருடிய பெண் கைது


திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மயக்க லட்டு கொடுத்து பயணிகளிடம் நகைகளை திருடிய பெண் கைது
x
தினத்தந்தி 1 Jan 2020 11:15 PM GMT (Updated: 1 Jan 2020 4:26 PM GMT)

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மயக்க லட்டு கொடுத்து பயணிகளிடம் நகைகளை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8½ பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே ரெங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த சண்முகத்தின் மனைவி பார்வதி (வயது 50). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பார்வதி அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வது உண்டு.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 27-ந் தேதி திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பல்லடம் செல்வதற்காக கோவை பஸ்சில் பயண டிக்கெட் எடுத்து அமர்ந்திருந்தார். அப்போது அவரது இருக்கையின் அருகே ஒரு பெண் வந்து அமர்ந்தார். பார்வதியிடம் அவர் நைசாக பேச்சுகொடுத்து பழகினார்.

மயக்க லட்டு

அப்போது அவருக்கு மயக்க மருந்து கலந்த லட்டு ஒன்றினை அந்த பெண் வழங்கினார். இதனை சாப்பிட்ட பார்வதி மயக்கமடைந்தார். அந்த நேரத்தில் பார்வதி அணிந்திருந்த 8½ பவுன் தங்க நகைகளை நைசாக திருடி விட்டு இறங்கினார்.

இதற்கிடையில் பார்வதி பல்லடம் சென்றதும் அங்கு சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பின் தான் நகைகள் திருடு போனது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் பார்வதி புகார் கொடுத்திருந்தார்.

பெண் கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் பார்வதி திருச்சியில் இருந்து கோவை செல்வதற்காக மத்திய பஸ் நிலையத்தில் கோவை பஸ்சில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது அருகே ஒரு பெண் வந்து அமர்ந்தார். அவரை கண்டதும் பார்வதி சந்தேகமடைந்தார். தனக்கு மயக்க மருந்து கலந்த லட்டுவை கொடுத்து நகைகளை திருடி சென்ற பெண் தான் அவர் என தெரிந்தது. இதையடுத்து அந்த பெண்ணை அங்கிருந்த புறக்காவல் நிலைய போலீசார் உதவியுடன் பார்வதி பிடித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே களப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சுப்ரமணியின் மனைவி ராணி (45) என தெரிந்தது. மேலும் அவர் மயக்க லட்டு கொடுத்து பார்வதியிடம் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ராணியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 8½ பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

வேதிப்பொருள்...

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் ராணி, மத்திய பஸ் நிலையத்தில் பல பயணிகளிடம் மயக்க லட்டு கொடுத்து நகைகளை திருடியது தெரியவந்தது. ராணி பயன்படுத்திய மயக்க மருந்து கலந்த லட்டுவை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் கலந்து உள்ள வேதிப்பொருள் குறித்து ஆய்வு செய்வதற்காக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story