புத்தாண்டையொட்டி கோவில்- கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு


புத்தாண்டையொட்டி கோவில்- கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 1 Jan 2020 10:30 PM GMT (Updated: 1 Jan 2020 4:39 PM GMT)

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில், வயலோகம் முத்துமாரியம்மன் கோவில், அன்னவாசல் சிவன் கோவில், இலுப்பூர், திருவேங்கைவாசல், குடுமியான்மலை, பரம்பூர், வேளாம்பட்டி, தாண்றீஸ்வரம், வெள்ளனூர், மலைக்குடிபட்டி போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

இதேபோல் அன்னவாசல் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு பண்டிகையை கிறிஸ்தவ மக்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். ஆலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், இலுப்பூர், மகுதுப்பட்டி, சாத்தம்பட்டி, உடையான்பட்டி, தாண்றீஸ்வரம், மாதாகோவில், மாங்குடி, வயலோகம், பெருஞ்சுனை, இரும்பாளி, பொம்மாடிமலை, அம்மாசத்திரம், பசுமலைப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆலயங்களில் நள்ளிரவு நடந்த கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும் ஆலயங்களில் கத்தோலிக்க கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது.

வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்

கிறிஸ்தவ ஆலயங்களில் இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் வகையிலான குடில் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் வண்ண விளக்குகள், பூக்களால் கிறிஸ்தவ ஆலயங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. புத்தாடை அணிந்த கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றனர். பின்னர் ஒருவருக்கொருவர் கேக் வழங்கி வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனர். இயேசு கிறிஸ்து பிறந்ததை சுட்டிக்காட்டும் வகையிலான தொட்டில்கள் கிறிஸ்தவ ஆலயங்களிலும், வீடுகளிலும் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், தங்கள் வீடுகளை வண்ண காகிதங்கள், நட்சத்திரங்கள், விளக்குகளால் கிறிஸ்தவர்கள் அலங்கரித்திருந்தனர். அன்னவாசல் கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பரிசுப்பொருட்களை குழந்தைகளுக்கு வழங்கி மகிழ்வித்தனர்.

அன்னதானம்

ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதமாக கீரமங்கலம் மெய்நின்றநாதர் சுவாமி கோவிலில் அதிகாலை முதல் சிவலிங்கம், அம்பாள், சண்முகநாதர் மற்றும் பல்வேறு சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல செரியலூர் கறம்பக்காடு முத்துமாரியம்மன் கோவில், தீர்த்த சித்திவிநாயகர் கோவில், கொத்தமங்கலம் முத்துமாரியம்மன், மேற்பனைக்காடு மழைமாரியம்மன், குளமங்கலம் மாரியம்மன் கோவில்கள், சேந்தன்குடி ஜெயநகரம் பாலசுப்பிரமணியர் கோவில், மாங்காடு விடங்கேஸ்வரர் கோவில், அணவயல் முக்கரைவிநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

கீரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராம பழனி பாதயாத்திரை பக்தர்கள் குழு சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் சண்முகநாதர் சிறப்பு வழிபாடும், தொடர்ந்து மெய்நின்றநாதர் சுவாமி கோவில் வளாகத்தில் அன்னதான நிகழ்ச்சியும் செய்திருந்தனர். அதே போல செரியலூர் தீர்த்த விநாயகர் கோவிலில் இளைஞர்களால் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சாந்தநாத சுவாமி கோவில்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவில், அரியநாச்சி அம்மன் கோவில், திருவப்பூர், முத்துமாரியம்மன் கோவில், விராலிமலை சுப்பிரமணியசுவாமி கோவில், குமரமலை பால தண்டாயுதபாணி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மேலும் கறம்பக்குடி, திருமணஞ்சேரி சுகந்த பரிமலேஸ்வரர் கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டையில் உள்ள திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் இரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்கும் வகையில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு இனிப்புகளை வழங்கினர். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

கீரனூர்

கீரனூர் சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு சாலைகளில் வெள்ளை பெயிண்டால் புத்தாண்டை வரவேற்று வாசகங்களை எழுதியிருந்தனர். சரியாக 12 மணி ஆனதும் கேக்வெட்டி கொண்டாடி தங்களது வாழ்த்துக்களை நண்பர்களுடன் பரிமாறிக்கொண்டனர். மேலும் கீரனூரில் உள்ள கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ராதா கல்யாண மஹோத்துவம்

புதுக்கோட்டையில் ஸத் சங்கம் சார்பில், ராதா கல்யாண மஹோத்துவ விழா கீழ 3-ம் வீதி பாகவதர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு இசையுடன் பக்தி பஜனை நடைபெற்றது. புத்தாண்டு பிறப்பையொட்டி நேற்றுமுன்தினம் நள்ளிரவில் 12 மணிக்கு புத்தாண்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


Next Story