சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 1 Jan 2020 10:45 PM GMT (Updated: 1 Jan 2020 8:31 PM GMT)

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சுசீந்திரம்,

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தது. காலை 8.45 மணி அளவில் கொடிபட்டத்தை மேளதாளம் முழங்க ஊர்வலமாக 4 ரதவீதிகள் வழியே கொண்டு சென்று மீண்டும் கோவிலுக்குள் கொண்டு வந்தனர்.

கொடியேற்றம்

சரியாக 9.30 மணியளவில் மேளதாளத்துடன் கொடிபட்டத்தை தெற்குமண் மடம் திலீபன் நம்பூதிரி கொடிமரத்தில் ஏற்றி வைத்தார். பின்னர் கொடிபீடத்திற்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடந்தன. இதனை வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் சர்மா செய்தார். பின்னர் தேர்களுக்கு கால்கோள் விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, பால்வள தலைவர் எஸ்.ஏ. அசோகன், வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா, அறங்காவலர் குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேரோட்டம்

கொடியேற்றம் முடிந்த பின்னர் பக்தர்கள் சங்கம் சார்பில் கோவிலில் இருந்து ரதவீதிகள் வழியே திருமுறை பேரவை ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் திருவாவடுதுறை ஆதீன மடத்தை சென்றடைந்தது. தொடர்ந்து தம்பையா ஓதுவாரின் திருவெம்பாவை பாராயண நிகழ்ச்சி நடந்தது.

திருவிழாவில், தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

9-ந் தேதி காலை 7.45 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய தேர்கள் உலா வருகின்றன. அன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சியும், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகமும், அறங்காவலர் குழுவினரும், பக்தர்களும், ஊர் பொதுமக்களும் இணைந்து செய்து வருகின்றனர்.


Next Story