தி.மு.க.வேட்பாளர் வெற்றி பெற்றதை அறிவிக்க காலம் தாழ்த்தியதால் அதிகாரிகளை முகவர்கள் முற்றுகையிட்டு போராட்டம்


தி.மு.க.வேட்பாளர் வெற்றி பெற்றதை அறிவிக்க காலம் தாழ்த்தியதால் அதிகாரிகளை முகவர்கள் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 2 Jan 2020 10:15 PM GMT (Updated: 2 Jan 2020 12:47 PM GMT)

தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதை அறிவிக்க காலம் தாழ்த்தியதால் அதிகாரிகளை முகவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புவனகிரி,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த 27-ந்தேதியும், 2-ம் கட்ட தேர்தல் கடந்த 30-ந்தேதியும் நடைபெற்றது. இதையடுத்து வாக்குபெட்டிகள் அனைத்தும் அந்தந்த வாக்குஎண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

 அதன்படி மேல் புவனகிரி ஒன்றியத்துக்காக அங்குள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குஎண்ணிக்கை மையத்தில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதில் 1–வது வார்டு ஒன்றிய கவுன்சிலருக்கான (வளையமாதேவி) வாக்குகளை எண்ணினர். இதில் அ.தி.மு.க. வேட்பாளரை விட 657 வாக்குகள் அதிகம் பெற்று தி.மு.க. வேட்பாளர் செல்வராஜ் வெற்றி பெற்றார்.

ஆனால் அவர் வெற்றி பெற்றதற்கான அறிவிப்பை அதிகாரிகள் வெளியிடாமல் காலதாமதம் செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க. வேட்பாளர் மற்றும் அங்கிருந்த அக்கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் ஒன்று சேர்ந்து தேர்தல் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் தாசில்தார் சத்தியன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து தி.மு.க. வேட்பாளர் செல்வராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story