வாக்கு எண்ணும் மையத்தில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம்


வாக்கு எண்ணும் மையத்தில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம்
x
தினத்தந்தி 2 Jan 2020 11:15 PM GMT (Updated: 2 Jan 2020 6:47 PM GMT)

நாகையில் வாக்கு எண்ணும் மையத்தில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்,

நாகையில் உள்ள அமிர்தா வித்யாலயா பள்ளியில் நாகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தி.மு.க. சார்பில் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிட்ட பாண்டியன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அப்போது வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி உள்ளதாக கூறி அ.தி.மு.க.வினர் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா. இதனால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. சுமார் 2 மணி நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதை கண்டித்து அனைத்து முகவர்களும் வாக்கு என்னும் மையம் முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோஷம் எழுப்பினர்

அப்போது அவர்கள், நிறுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கோரி கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

அதிரடிப்படை போலீசார் குவிப்பு

இந்தநிலையில் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், தி.மு.க.வினரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அ.தி.மு.க.வினர், எந்த அடையாள அட்டையும் இன்றி எப்படி தி.மு.க.வினரை அனுமதித்தீர்கள் என அதிகாரிகளிடம் கேட்டனர். இதனால் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கண்டித்து கோ‌‌ஷம் எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தலைமையில் ஏராளமான அதிரடிப்படை போலீசார் வாக்குஎண்ணும் மையத்தில் குவிக்கப்பட்டனர். இதன் பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

Next Story