திருச்செங்கோடு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திருநங்கை ரியா அபார வெற்றி


திருச்செங்கோடு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திருநங்கை ரியா அபார வெற்றி
x
தினத்தந்தி 2 Jan 2020 11:15 PM GMT (Updated: 2 Jan 2020 6:58 PM GMT)

திருச்செங்கோடு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திருநங்கை ரியா அபார வெற்றி பெற்றார். அவர் கூறும்போது, ‘மக்கள் பிரச்சினையை தீர்க்க பாடுபடுவேன்’, என்றார்.

நாமக்கல்,

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு எண்-2 ல் உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது. இங்கு 4,693 வாக்குகள் பதிவானது. இதில் 164 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் இங்கு போட்டியிட்ட திருநங்கை ரியா (வயது 35) என்பவர் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 2,701 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.

சான்றிதழ்

இந்த தேர்தலில் கந்தம்மாள் 1,751 வாக்குகளும், சுமதி 77 வாக்குகளும் பெற்றனர். வெற்றி பெற்ற திருநங்கை ரியாவுக்கு தேர்தல் அலுவலர் பாலசுப்பிரமணியன் சான்றிதழ் வழங்கினார். உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி பெற்றதற்கு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

பேட்டி

இதுகுறித்து திருநங்கை ரியா கூறியதாவது:-

எனது சொந்த ஊர் திருச்செங்கோடு அருகே உள்ள கருவேப்பம்பட்டி ஆகும். நான் சென்னையில் பணிபுரிந்து வருகிறேன். தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். நான் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவேன். இந்த வெற்றியை முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் சமர்ப்பிக்கிறேன். முழு நேர அரசியல்வாதியாக இருந்து மக்கள் பணியாற்றுவேன். இவ்வாறு திருநங்கை ரியா கூறினார்.

Next Story