காய்கறி, பழங்களை சாகுபடி செய்ய சிறப்பு திட்டம் - கலெக்டர் கண்ணன் தகவல்


காய்கறி, பழங்களை சாகுபடி செய்ய சிறப்பு திட்டம் - கலெக்டர் கண்ணன் தகவல்
x
தினத்தந்தி 2 Jan 2020 10:30 PM GMT (Updated: 2 Jan 2020 10:52 PM GMT)

காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடியை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்ட தோட்டக்கலைத்துறையில் வருவாய் கிராமந்தோறும் 25 ஏக்கரில் காய்கறி மற்றும் 5 ஏக்கரில் பழங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனித ஆரோக்கியத்திற்கு தேவையான சரிவிகித உணவு வழங்குவதில் காய்கறிகளும், பழங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதன்படி, ஒவ்வொரு மனிதனும் தினமும் 300 கிராம் காய்கறிகளும் 100 கிராம் பழங்களும் உண்ண வேண்டும் என ஆய்வு கூறுகிறது.

தமிழ்நாட்டில் சராசரியாக ஒவ்வொருவருக்கும் 207 கிராம் காய்கறி மற்றும் 197 கிராம் பழங்கள் என்ற அளவில் உற்பத்தி ஆனாலும், நபர் ஒருவருக்கு 103 கிராம் காய்கறிகளும் 79 கிராம் பழங்களும் தான் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்கச் செய்வதற்கு, காய்கறி மற்றும் பழப் பயிர்களின் உற்பத்தியை உயர்த்துவதற்கு அரசு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 2018-19-ம்ஆண்டு புள்ளி விவரப்படி, 5.8 லட்சம் ஏக்கர் பரப்பளவில் காய்கறியும், 7.3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பழப்பயிர் களும் சாகுபடி செய்யப்பட்டு 60 லட்சம் மெட்ரிக் டன் காய்கறிகளும் 57 லட்சம் மெட்ரிக் டன் பழங்களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை அவர்களின் வீட்டுத் தோட்டத்திலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் முதல்-அமைச்சர் கிராமப்புற காய்கறி உற்பத்தி திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளார். காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள சிறப்புதிட்டத்தின் கீழ், ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் 25 ஏக்கரில் காய்கறிப் பயிர்கள் சாகுபடியையும் 5 ஏக்கரில் பழப்பயிர்கள் சாகுபடியையும் அதிகப்படுத்த வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

முதல்-அமைச்சரின் கிராமப்புற காய்கறி உற்பத்தித் திட்டத்தின் கீழ் ஒரு கிராம பஞ்சாயத்தில் 100 விலையில்லா காய்கறி விதைகள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் கத்தரி, வெண்டை, மிளகாய், தக்காளி, பாகல், புடலை போன்ற ஏழு விதமான காய்கறி விதைகளும், இக்காய்கறிகளை சாகுபடி செய்வதற்குத் தேவையான இயற்கை உரமும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் 43,500 காய்கறி விதை பாக்கெட்டுகள் வினியோகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வினியோகிக்கப்பட்டு வருகின்றன. பழமரக்கன்றுகள் தேவைக்கு அருகில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையையோ அல்லது தோட்டக்கலை உதவி இயக்குனரையோ அணுகலாம்.

மேலும் விவசாயிகள் தங்களிடம் உள்ள விளைநிலத்தில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பரப்பில் காய்கறிகள் மற்றும் பழப்பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ்நாட்டில் தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், ஒருங்கிணைந்ததோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்களின் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், பழமரக்கன்றுகள், நிழல்வலைக்கூடங்கள், வேளாண் எந்திரங்கள், மண்புழு தயாரிப்பு மையம், தேனீ வளர்ப்பு, அறுவடைக்குப் பின் செய்வதற்குத் தேவையான உட்கட்டமைப்புகளும் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், பாசனம் பெறும் சாகுபடி பரப்பை உயர்த்துவதற்காக, அரசு சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் போன்ற நுண்ணீர் பாசன முறைகளை தமிழக விவசாயிகளிடையே பிரபலப்படுத்துவதற்காக, சிறுகுறு விவசாயிகளுக்கு முழு மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கி வருவதால், பாசன நீர் உபயோகத்திறனை உயர்த்தி, கூடுதல் பரப்பில் காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடி செய்ய இயலும்.

தமிழ்நாட்டு மக்களின் உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ள இத்திட்டத்தின் மூலம், அனைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்ய இயலும் என்பதால், இந்த வாய்ப்பை அனைவரும் நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Next Story