ஜல்லிக்கட்டு நடத்த 20 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் - கலெக்டர் தகவல்


ஜல்லிக்கட்டு நடத்த 20 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 3 Jan 2020 10:00 PM GMT (Updated: 3 Jan 2020 2:11 PM GMT)

ஜல்லிக்கட்டு நடத்த 20 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.

திண்டுக்கல், 

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். முன்னதாக ஜல்லிக்கட்டு நடத்த விரும்புபவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, அதன் பின்னர் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மாவட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் குழுவினர், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு 20 நாட்கள் முன்பே மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது, ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம், ஜல்லிக்கட்டு தொடர்பாக கிராம கணக்கு புத்தகத்தில் பதியப்பட்டுள்ள விவரம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

அத்துடன் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அனுமதி கேட்கும் இடத்தில் ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அனுமதி பெற்றதற்கான ஆவணங்கள், பத்திரிகை செய்தி, ஜல்லிக்கட்டின் போது ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் அதற்கு ஜல்லிக்கட்டு நடத்தும் குழுவினரே பொறுப்பு என்பதற்கான உத்தரவாத பத்திரம், ஜல்லிக்கட்டுக்காக செய்யப்பட்ட காப்பீடு தொடர்பான விவரங்கள் ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னரே ஜல்லிக்கட்டு நடத்த சம்பந்தப்பட்ட குழுவினருக்கு அனுமதி வழங்கப்படும். அதன் பின்னரே ஜல்லிக்கட்டு தொடர்பான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட குழுவினர் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Next Story