நாமக்கல் அருகே வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கான சிறப்பு முகாம் கலெக்டர் மெகராஜ் ஆய்வு


நாமக்கல் அருகே வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கான சிறப்பு முகாம் கலெக்டர் மெகராஜ் ஆய்வு
x
தினத்தந்தி 4 Jan 2020 11:00 PM GMT (Updated: 4 Jan 2020 7:55 PM GMT)

நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டியில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கான சிறப்பு முகாமை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 18 வயது பூர்த்தியடைந்தவர்களும், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து கொள்ளாதவர்கள் மற்றும் திருத்தங்கள் செய்ய விரும்புபவர்களும் உரிய விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் அளிக்குமாறு நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டது.

இதற்காக நேற்று, இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களிலும், வருகிற 11 மற்றும் 12-ந் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என கலெக்டர் மெகராஜ் ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 661 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தது.

கலெக்டர் மெகராஜ் ஆய்வு

அந்த மையங்களில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதற்கிடையே நாமக்கல் அருகே உள்ள செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த சிறப்பு முகாமை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் விவரங்களை அவர் கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து களங்கானியில் நடைபெற்ற சிறப்பு முகாமையும் கலெக்டர் பார்வையிட்டார். இன்று 2-வது நாளாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story