குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்


குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்
x
தினத்தந்தி 5 Jan 2020 11:00 PM GMT (Updated: 5 Jan 2020 3:22 PM GMT)

குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகராட்சி, காமராஜபுரம் அர்பன் கூட்டுறவு பண்டகசாலையில் பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே.வைரமுத்து, ஆறுமுகம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்களை வழங்கி பேசியதாவது:-

வேட்டி-சேலை

குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.ஆயிரம், வேட்டி, சேலையினை வழங்கி வருகிறார்கள். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (அதாவது நேற்று) முதல் வருகிற 13-ந்தேதி வரை அனைத்து நாட்களிலும் சம்பந்தப்பட்ட ரே‌‌ஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.ஆயிரம் வழங்கப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 53 ஆயிரத்து 340 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் இந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறும் வகையில் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதுடன், ரூ. ஆயிரம் மற்றும் இலவச வேட்டி, சேலையும் வழங்கப்படுகிறது. இதன்மூலம் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மலைக்குடிப்பட்டி, விராலிமலை

இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், மலைக்குடிப்பட்டி ரே‌‌ஷன் கடையிலும், விராலிமலை ரே‌‌ஷன் கடையிலும் தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.ஆயிரத்தை அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சின்னத்தம்பி, கோட்டாட்சியர்கள் தண்டாயுதபாணி, டெய்சிகுமார், மாவட்ட பால்வளத்தலைவர் பழனியாண்டி, கூட்டுறவு சங்கத்தலைவர் ராமசாமி, ஆத்மா குழுத்தலைவர் சாம்பசிவம், மத்திய தொலைத்தொடர்பு ஆலோசனைக் குழு உறுப்பினர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து விராலிமலை முருகன் கோவிலுக்கு மலையின்மேலே வாகனங்கள் சென்றுவரும் வகையில் ரூ.3 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் மலையில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கலெக்டர் உமாமகேஸ்வரி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story