காட்டாங்கொளத்தூர் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு


காட்டாங்கொளத்தூர் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 5 Jan 2020 10:45 PM GMT (Updated: 5 Jan 2020 7:36 PM GMT)

காட்டாங்கொளத்தூர் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் காந்தள் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான்மில்லர் (வயது 23), இவர் நேற்று முன்தினம் இரவு கொருக்கந்தாங்கல் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விமல், குட்டி ஆகியோர் முன்விரோதம் காரணமாக ஜான்மில்லரை வழிமறித்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த ஜான்மில்லரை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த புங்கத்தூரை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சதீஷ் (வயது 35). நேற்று முன்தினம் சதீஷ் தன்னுடைய வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்கிற ராஜப்பன் என்பவர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு சதீஷை தகாத வார்த்தைகளால் பேசி தான் வைத்திருந்த கத்தியால் தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்.

இதில் காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சதீஷ் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் ஆந்திர மாநிலம் திருப்பதி ரங்கம் பேட்டா பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி( வயது 58). இவர் நேற்று முன்தினம் வேலையின் காரணமாக திருவள்ளூருக்கு வந்தார். அப்போது அங்கு வந்த புங்கத்தூரை சேர்ந்த ராஜ்குமார் என்கின்ற ராஜப்பன் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு ராமமூர்த்தியை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்.

இதில் காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ராமமூர்த்தி திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.

Next Story