இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதில் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது அமைச்சர் பேட்டி


இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதில் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 5 Jan 2020 11:00 PM GMT (Updated: 5 Jan 2020 7:38 PM GMT)

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதில் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது என அமைச்சர் காமராஜ் கூறினார்.

கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம் ஆகிய இடங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தினை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்த அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் தெரிவித்து விட்டோம். சிறுபான்மை இன மக்களுக்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதிலும் அ.தி.மு.க. அரசு உறுதியாக உள்ளது.

கட்சியின் பொதுக்குழுவில் தொண்டர்களை உற்சாகப்படுத்த சில கருத்துக்களை தெரிவிப்பது அனைத்து கட்சிகளிலும் நடைபெறும். அந்த வகையில் பா.ம.க. பொதுக்குழுவில் அன்புமணி ராமதாஸ் சில கருத்தினை முன் வைத்துள்ளார்.

மிகப்பெரிய வெற்றி

தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அன்புமணி ராமதாஸ் உறுதியாக இருக்கிறார். ஆகையால் சிறிய பிரச்சினைகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வெற்றி கிடைத்துள்ளது. அதேபோல நாங்குநேரி, விக்கிரவாண்டியில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெற்றது.

முதலிடம்

உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத மற்ற மாவட்டங்களிலும் தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழக அரசியலில் இன்றைக்கும், என்றைக்கும் அ.தி.மு.க. தான் முதலிடத்தில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலெக்டர் ஆனந்த், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, கூட்டுறவு சங்க தலைவர் கலியபெருமாள், அ.தி.மு.க. நிர்வாகிகள் பன்னீர்செல்வம், அன்பு, குணசேகரன், மூர்த்தி, மணிகண்டன், பழனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story