சேலத்தில் ஆசிரியையிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு - 2 வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


சேலத்தில் ஆசிரியையிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு - 2 வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Jan 2020 10:45 PM GMT (Updated: 5 Jan 2020 8:28 PM GMT)

சேலத்தில் ஆசிரியையிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம், 

சேலம் சூரமங்கலம் சுப்பிரமணியநகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி சொர்ணலதா (வயது 31). இவர் ஜலகண்டாபுரம் அருகே சவுரியூரில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக வீட்டின் அருகே உள்ள ஒரு கடைக்கு சென்றார்.

அங்கு மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு 2 பேர் வந்தனர். திடீரென்று மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்திருந்த வாலிபர் சொர்ணலதா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டார்.

இதனால் திடுக்கிட்ட அவர் திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். அப்போது அங்கிருந்த சிலர் சம்பவம் நடந்த இடத்திற்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் இரண்டு பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து சொர்ணலதா சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பள்ளி ஆசிரியையிடம் தங்க சங்கிலியை பறித்துச்சென்ற 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story